2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை மாமியார், நாத்தனாரின் பேச்சால் விரக்தி
2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை மாமியார், நாத்தனாரின் பேச்சால் விரக்தி
ADDED : ஆக 20, 2026 11:52 PM
ஹாசன்: மாமியார் மற்றும் நாத்தனாரின் கொடுமையால், இளம் பெண் தன் குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஹாசன் மாவட்டம், ஆலுாரு தாலுகாவின், சிங்காபுரா கிராமத்தில் வசிப்பவர் சீனிவாஸ், 30. இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் அனுஸ்ரீ, 27. அக்கம், பக்கத்தில் வசித்ததால், இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களின் திருமணத்துக்கு, சீனிவாசின் தாய் ஜெயம்மாவும், அக்காவும் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் பார்க்கும் பெண்ணையே, திருமணம் செய்ய வேண்டும் என, பிடிவாதம் பிடித்தனர்.
ஆனால், அனுஸ்ரீ குடும்பத்தினர், சம்மதம் தெரிவித்து, கோவிலில் திருமணம் செய்து வைத்தனர். ஜெயம்மா தன் மகனையும், மருமகளையும் வீட்டில் சேர்க்கவில்லை.
எனவே புதுமண தம்பதி, பெங்களூருக்கு சென்று, வசித்து வந்தனர். நிதி நிறுவனம் ஒன்றில், சீனிவாஸ் பணியில் அமர்ந்து கொண்டார். திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்கு பின், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தம்பதி நிம்மதியாக வாழ்ந்தனர்.
இதற்கிடையே, தன் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து வைத்ததால், சீனிவாசின் தாய் ஜெயம்மா, அனுஸ்ரீயின் தாய் யசோதாவை, தினமும் தகாத வார்த்தைகளை பேசி, சண்டை போட்டார்.
இதனால் வருந்திய அனுஸ்ரீ, தாலியை கழற்றி விட்டு, குழந்தையை அழைத்து கொண்டு தனியாக வசித்தார். மூன்று நாட்களுக்கு முன், தாய் வீட்டுக்கு வந்து, பார்த்து சென்றார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை, 5:00 மணிக்கு, கணவருக்கு போன் செய்து, தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அதன்படி சீனிவாசும் அங்கு வந்தார். ஆனால் கதவு, ஜன்னல் மூடப்பட்டிருந்தது. தட்டியும் திறக்கவில்லை. அதன் பின் அனுஸ்ரீயின் அண்ணன் சஞ்சுவுக்கு தகவல் கூறி, வரவழைத்தார். போலீசாருக்கு தகவல் கூறினர்.
போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, 2 வயது மகன் ஆர்யனின் முகத்தில், தலையணையை வைத்து அழுத்தி, கொலை செய்த அனுஸ்ரீ, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இருவரின் உடல்களையும், போலீசார் மீட்டனர். இது குறித்து, வழக்கு பதிவு செய்துள்ளனர். தாய், மகனின் கண்களையும் சீனிவாசும், சஞ்சுவும் தானம் செய்துள்ளனர். அவர்கள் இருவரின் கண்களையும், மருத்துவமனையிலிருந்து வந்தவர்கள் எடுத்து சென்றனர்.
