/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடிகார மகனை கொன்ற தாய் கைது: தொந்தரவு தாங்காமல் தீர்த்து கட்டினார்
/
குடிகார மகனை கொன்ற தாய் கைது: தொந்தரவு தாங்காமல் தீர்த்து கட்டினார்
குடிகார மகனை கொன்ற தாய் கைது: தொந்தரவு தாங்காமல் தீர்த்து கட்டினார்
குடிகார மகனை கொன்ற தாய் கைது: தொந்தரவு தாங்காமல் தீர்த்து கட்டினார்
ADDED : ஏப் 26, 2026 11:53 PM

மைசூரு: குடிகார மகனின் தொந்தரவு தாங்காமல், அவரை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
மைசூரின் சாமுண்டி மலையடிவாரத்தில் மூன்று நாட்களுக்கு முன், அடையாளம் தெரியாத ஆணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லை துாக்கி போட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இதை கவனித்த சிலர், நஜர்பாத் போலீஸ் நிலையத்துக்கு, தகவல் கொடுத்தனர்.
அதன்பின் அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கினர். விசாரணையில் கொலையானவர் ரமேஷ், 43, என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரை கொலை செய்தது, இவரது தாய் என்பது தெரிந்தது.
மைசூரின் என்.ஆர்.மொஹல்லாவில் வசிப்பவர் மஞ்சுளா, 63. இவரது மகன் ரமேஷ், 43. கணவரை இழந்த மஞ்சுளா, பலரின் வீடுகளில் வீட்டு வேலை செய்து, வாழ்க்கை நடத்துகிறார்.
ஆனால் இவரது மகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். எந்த பணிக்கும் செல்லாமல், தினமும் மதுபானம் குடிக்க தாயிடம் பணம் பறித்து செல்வார்.
பணம் கொடுக்காவிட்டால், தாயை அடித்து கொடுமைப்படுத்தினார். தகாத வார்த்தைகளால் திட்டினார். மகனின் தொந்தரவு தாங்காமல், மஞ்சுளா அவதிப்பட்டார். குடிப்பழக்கத்தை விட்டு விடும்படி, அறிவுரை கூறியும், ரமேஷ் திருந்தவில்லை.
சம்பவ நாளன்று மகனை, சாமுண்டி மலையடிவாரத்துக்கு அழைத்து சென்றார். அங்கு தாய்க்கும், மகனுக்கும் வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த மஞ்சுளா, அங்கிருந்த கல்லை எடுத்து மகனின் தலையில், ஓங்கி தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த மகன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அதன்பின் அங்கிருந்து மஞ்சுளா வீட்டுக்கு சென்று விட்டார்.
உடலை மீட்டு விசாரணை நடத்திய போலீசாருக்கு, எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதன்பின் சுற்றுப்பகுதியின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மஞ்சுளாவும், ரமேஷும் சாமுண்டி மலை அடிவாரத்துக்கு சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
இதை வைத்து மஞ்சுளாவை கண்டுபிடித்து விசாரித்த போது, மகனின் தொந்தரவு தாங்காமல், அவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மஞ்சுளாவை கைது செய்தனர்.

