பிறவி பாவங்களை போக்கும் முக்தி ஷேத்திரம் சிவன் கோவில்
பிறவி பாவங்களை போக்கும் முக்தி ஷேத்திரம் சிவன் கோவில்
ADDED : செப் 01, 2026 03:10 AM

- நமது நிருபர் -:
ஹாவேரி மாவட்டம், சவுடையாதானபுராவில் ஸ்ரீ முக்தேஸ்வர் கோவில் அமைந்து உள்ளது. இது, 12ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவன் கோவிலாகும். துங்கபத்ரா ஆற்றின் அருகே, கோவில் உள்ளது; சாளுக்கியர்களால் கட்டப்பட்டது. சாளுக்கிய கட்டடக்கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கோவிலின் மூலவரான ஸ்ரீ முத்தேஸ்வர், லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கிறார். இந்த லிங்கம் சுயம்பாக தோன்றியது. சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணர் குறித்த கல்வெட்டுகள் கோவிலில் இடம்பெற்று உள்ளன. துங்கபத்ரா ஆற்றில் குளித்த பின், சுவாமியை வழிபட்டால் பிறவி பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால், இக்கோவில் 'முக்தி ஷேத்திரம்' என அழைக்கப்படுகிறது.
இங்கு பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் காணப்படும். தீய சக்திகளிடம் இருந்து குடும்பங்களை பாதுகாக்க ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது.
நீண்ட நாட்களாக இருக்கும் நோயிலிருந்து விடுபட, பக்தர்கள், நெய் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபடுகின்றனர். கோவிலை சுற்றி உள்ள சிலைகள் பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இயற்கையான சூழலில் கோவில் அமைந்திருப்பதால், பக்தர்களுக்கு மன அமைதியை ஏற்படுத்துகிறது. காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
பஸ்: பெங்களூரிலிருந்து ஹாவேரி 350 கி.மீ., துாரத்தில் உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பஸ்சில் பயணிப்பதன் மூலம் நேரடியாக ஹாவேரிக்கு செல்லலாம். அங்கிருந்து, கோவில் 45 கி.மீ., துாரத்தில் உள்ளது. பஸ் நிலையத்திலிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.
ரயில்: பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்திலிருந்து 07314 என்ற எண் ரயிலில் பயணிப்பதன் மூலம் ஹாவேரியை அடையலாம். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.
