ADDED : அக் 09, 2025 11:03 PM
ராம்நகர்: கொலை வழக்கில் சிறையில் இருந்து, ஜாமினில் வந்த ரவுடி படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு, கெங்கேரி ஹெம்மிகேபுரா கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி, 25. ரவுடி. இவர் மீது கெங்கேரி, ஞானபாரதி, ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு தலகட்டபுராவில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் சிரஞ்சீவி அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாமினில் வெளியே வந்தார். இவரை ஒரு கும்பல் தேடியதால், உயிருக்கு பயந்து, மனைவியின் ஊரான ராம்நகரின் கனகபுரா பிச்சனகெரே கிராமத்தில், ஒன்றரை மாதமாக வசித்தார்.
சில தினங்களுக்கு முன்பு, பிச்சனகெரே கிராமத்தின் இளைஞர்கள் சிலரிடம் தகராறு செய்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சிரஞ்சீவி, இரவில் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடினர். அவர் கிடைக்கவில்லை.
நேற்று காலை பத்ரேகவுடனதொட்டி என்ற கிராமத்தில், வயல்வெளியில் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கனகபுரா போலீசார் அங்கு சென்றனர். சிரஞ்சீவியை அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் மர்மநபர்கள் படுகொலை செய்தது தெரிந்தது. கொலையாளிகள் யார், என்ன காரணம் என்று தெரியவில்லை.
தலகட்டபுராவில் நடந்த கொலைக்கு பழிக்கு, பழியாக கொல்லப்பட்டாரா அல்லது பிச்சனகெரே கிராமத்தின் இளைஞர்களால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.