/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.200 பாக்கிக்காக கொலை விடுதலையானவர் மீண்டும் சிறை
/
ரூ.200 பாக்கிக்காக கொலை விடுதலையானவர் மீண்டும் சிறை
ரூ.200 பாக்கிக்காக கொலை விடுதலையானவர் மீண்டும் சிறை
ரூ.200 பாக்கிக்காக கொலை விடுதலையானவர் மீண்டும் சிறை
ADDED : ஆக 16, 2025 05:02 AM

உத்தரகன்னடா: கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து, விடுதலையான நபர் ஒருவர், 200 ரூபாய்க்காக கொலை செய்துவிட்டு, மீண்டும் சிறைக்கு சென்றார்.
உத்தர கன்னடா மாவட்டம், சிர்சி தாலுகாவின் கமடகேரி கிராமத்தில் வசித்தவர் மஞ்சுநாத் பசய்யா, 50. குடும்ப பிரச்னை காரணமாக இவருக்கும், இவரது மாமனாருக்கும் தகராறு இருந்தது. இதனால், 2002ல் தன் மாமனாரை கொலை செய்தார்.
இந்த வழக்கில் மஞ்சுநாத் பசய்யாவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. தண்டனை காலம் முடிந்து, 2016ல் விடுதலை ஆனார். ஊருக்கு திரும்பினார்.
இவரை இதே ஊரில் வசிக்கும் ரவீஷ் கணபதி சின்னய்யா, 35, என்பவர் தன்னுடன் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றார். மஞ்சுநாத் பசய்யாவுக்கு, ரவீஷ் 500 ரூபாய் கூலி பாக்கி வைத்திருந்தார். இதில் 300 ரூபாய் கொடுத்துவிட்டார்; 200 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது.
நேற்று முன் தினம் இரவு 8:30 மணியளவில், குடிபோதையில் இருந்த மஞ்சுநாத் பசய்யா, கமடகேரியின், வாதிராஜ் மடம் அருகில் ரவீஷை பார்த்து, 200 ரூபாயை கேட்டு சண்டை போட்டார். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த மஞ்சுநாத் பசய்யா, ரவீஷை கடப்பாறையால் மண்டையில் அடித்துக் கொலை செய்தார்.
நேற்று காலை, ரவீஷ் உடலை பார்த்த கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சிர்சி ஊரக போலீசார், உடலை மீட்டனர். கொலையாளி மஞ்சுநாத் பசய்யாவை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.