/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிரஹ தோஷங்களை போக்கும் மைசூரு நவக்கிரஹ கோவில்
/
கிரஹ தோஷங்களை போக்கும் மைசூரு நவக்கிரஹ கோவில்
ADDED : அக் 28, 2025 04:23 AM
- நமது நிருபர் - ஜாதகத்தில் கிரஹதோஷங்கள் இருந்தால் மனிதர்களின் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். நவக்கிரஹங்களை சுற்றி, பரிகாரம் செய்து கொள்வர். மைசூரில் நவக்கிரஹ கோவில் அமைந்துள்ளது. இங்கு பரிகாரம் தேடி, தினமும் அதிக எண்ணிக்கையில், பக்தர்கள் வருகின்றனர்.
மைசூரு நகரின் கே.என்.அக்ரஹாராவில் புராதன நவக்கிரஹ கோவிலை, 1920ல் அரச வம்சத்தின் ராமச்சந்திர ராஜா கட்டியதாக, வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஹொய்சாளர் பாணியில் அற்புதமாக கட்டப்பட்டுள்ளது.
சிறப்பான கட்டட கலையை காணலாம். கோவிலுக்குள் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் ராகு, கேது, சனி தோஷங்களை நிவர்த்தி செய்கிறது.
கிரஹ தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். எனவே, மைசூரு மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். இங்கு வந்து பூஜை செய்தால் உடல் ஆரோக்கியம் விருத்தியாவதுடன், வாழ்க்கையில் அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
கோவிலுக்குள் ராமாயணம், மஹாபாரதம் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உள்ளே இருக்கும் ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனால் கோவிலில், 'பாசிட்டிவ் எனர்ஜி' நிறைந்துள்ளது. இங்கு வந்து தரிசனம் செய்தால் நன்மைகள் நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
எப்படி செல்வது?
மைசூரின், என்.ஆர்.அக்ரஹாராவில் நவக்கிரஹ கோவில் அமைந்துள்ளது. மைசூரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், கோவிலுக்கு அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வெளியூரில் இருந்து பஸ் அல்லது ரயிலில் வரும் பக்தர்கள், மைசூரு நகர பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனங்களில் கோவிலுக்கு செல்லலாம்.

