ADDED : ஆக 16, 2026 11:04 PM
பெங்களூரு: சிவகங்கை மலையில் காணாமல் போனதாக கூறப்படும் இன்ஜினியர் அத்வைத் உபாத்யாயா, கடத்தப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மத்திய பிரதேசம், இந்துாரை சேர்ந்த அத்வைத் உபாத்யாயா, 31, பெங்களூரின், காடுகோடி அருகே தன் தாயுடன் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில், இன்ஜினியராக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. வரும் ஜனவரியில் திருமணம் நடக்கவுள்ளது.
இதற்கிடையே, கடந்த 7ம் தேதியன்று, நெலமங்களா அருகில் உள்ள சிவகங்கை மலைக்கு, 'டிரெக்கிங்' சென்றார். அங்கு போட்டோ எடுத்து, தன் வருங்கால மனைவிக்கு அனுப்பினார். அதன் பின், மலையேறி சென்றவர், மீண்டும் கீழே இறங்காமல் மர்மமான முறையில் மாயமானார்.
அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்த போது, கோடிக்கணக்கான ரூபாய் இருப்பது தெரிந்தது. தொழிலதிபரின் மகன் என்பதால், பணத்துக்காக இவரை மர்ம கும்பல் கடத்தியிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது.
