ADDED : மே 29, 2026 12:37 AM

பாகல்கோட்: கார்கில் போரில் கை, கால் இழந்த ராணுவ வீரருக்கு, இதுவரை வீட்டுமனை வழங்கவில்லை. மாநில அரசின் அலட்சியத்தை, பொதுமக்கள் கண்டித்துள்ளனர்.
பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவின் ஹுலசகேரி கிராமத்தில் வசிப்பவர் ரங்கப்பா ஆலுாரா. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர், கார்கில் போரில் பங்கேற்றவர்.
பாகிஸ்தானின் குண்டு வீச்சு தாக்குதலில், பலத்த காயமடைந்தார். சம்பவத்துக்கு பின், 50 மணி நேரம் கோமாவில் இருந்தார். அவர் உயிர் பிழைக்க, 28 அறுவை சிகிச்சைக்கு ஆளானார்.
குண்டு வெடிப்பில் அவரது ஒரு கால், இரண்டு கைகளை இழந்தார். ஊன்றுகோலின் உதவியுடன் நடமாடுகிறார். கைகள் இல்லாததால் ஊன்றுகோலை பிடிக்கவும் கஷ்டப்படுகிறார்.
இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும், தேச பக்தியை விடவில்லை. பாகல்கோட், கதக் மாவட்டங்களின் கிராமங்களுக்கு சென்று, ராணுவத்தில் சேரும்படி இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறார்.
ரங்கப்பாவுக்கு வீட்டுமனை தேவைப்படுகிறது. பல முறை வேண்டுகோள் விடுத்தும் அரசு பொருட்படுத்தவில்லை. முதல்வர், துணை முதல்வரை, பல அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை.
சமீபத்தில் தன் நண்பர் நாகப்பா சித்தன்னவராவுடன், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அமைச்சரும் இது குறித்து, அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக கூறியுள்ளார்.
நாட்டுக்காக போராடி, கை, கால் இழந்த ராணுவ வீரருக்கு மனை வழங்காத அரசின் அலட்சியத்தை, பொது மக்கள் கண்டித்துள்ளனர்.
