'லாக் - அப்' மரணங்களை தடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியீடு
'லாக் - அப்' மரணங்களை தடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியீடு
ADDED : மே 18, 2026 11:24 PM

பெங்களூரு: கர்நாடகாவில் லாக் - அப் மரணத்தை தடுக்க, புதிய வழிகாட்டுதல்களை டி.ஜி.பி., சலீம் வெளியிட்டு உள்ளார்.
போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்படுவோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள், கர்நாடகாவில் அவ்வப்போது நடக்கிறது. சமீபத்தில் கூட பெங்களூரில் கொலை வழக்கில் கைதான ஒருவர், போலீஸ் காவலில் இறந்தார். அவரை போலீசார் அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் லாக் - அப் மரணத்தை தடுக்கும் வகையில், புதிய வழிகாட்டுதல்களை மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம் வெளியிட்டு உள்ளார்.
விசாரணையின் போது போலீசார் தங்களை அடித்து துன்புறுத்தினர் என்று புகார் அளிப்போர், புகாரை உடனே ஏற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
போலீஸ் காவலில் மரணம் நிகழ்ந்தால், போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை உடனே மீட்டெடுத்து விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்
போலீசார் அடித்ததாக கூறும் பாதிக்கப்பட்டவர் அளிக்கும் வாக்குமூலத்தை ஒலி பதிவு செய்ய வேண்டும்
குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு, உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம்
போலீஸ் காவலில் ஏற்படும் மரணத்தை மறைக்கவும், வழக்கில் போலீசார் செல்வாக்கு செலுத்துவதை தடுக்கவும், வெளிப்படை தன்மையை நிலைநாட்டவும் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது.
'வழிகாட்டுதல்களை மீறி யாராவது செயல்பட்டது தெரிந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகள் நேரடி பொறுப்பு ஏற்க வேண்டும்' என்றும், டி.ஜி.பி., சலீம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
