அடுத்தவர் நிலத்தை அபகரித்த 80 வயது மூதாட்டி கைது
அடுத்தவர் நிலத்தை அபகரித்த 80 வயது மூதாட்டி கைது
ADDED : செப் 02, 2026 11:57 PM

ஹூப்பள்ளி: வேறு ஒருவருக்கு சொந்தமான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்களை உருவாக்கி, அபகரித்த மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
பெலகாவி நகரின், வடகாவ் கணேஷா காலனியில் வசிப்பவர் மந்தாகினி பரிஷவாட்கர், 80. பெலகாவி நகரின், கனபர்கி சாலையின் மஹாந்தேஷ் நகரில், ரத்னா யஷ்வந்த் மல்லுகர் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இது, கோடிக்கணக்கான ரூபாய் விலை மதிப்புள்ளதாகும். ரத்னா, நிலத்தை பார்க்க பல ஆண்டுகளாக வரவில்லை, காலியாக இருந்த இந்த நிலத்தை அபகரிக்க, மந்தாகினி சதி திட்டம் தீட்டினார்.
தானே ரத்னா என, கூறிக்கொண்டு போலியான ஆவணங்கள் தயாரித்தார். கடந்த, 2023ன் செப்டம்பர் 16ம் தேதியன்று, பெலகாவி வடக்கு துணை பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற மந்தாகினி, தானே நிலத்தின் உரிமையாளரை போல் நடித்தார்.
ஆவணங்களை கொடுத்து கட்டை விரல் ரேகை பதிவு செய்து, கையெழுத்திட்டு வேறு ஒருவருக்கு அந்த நிலத்தை விற்று விட்டார்.
இந்த மோசடி, 2025ன் பிப்ரவரியில் நிலத்தின் உண்மையான உரிமையாளர் ரத்னாவுக்கு தெரிந்தது.
உடனடியாக மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், பல கோணங்களில் விசாரித்த போது, மந்தாகியின் மோசடியை கண்டுபிடித்தனர்.
அவரை நேற்று முன் தினம் கைது செய்தனர். இவரது மோசடிக்கு உதவியாக இருந்த ராகுல் அனில் மகதும் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடி வருகின்றனர்.
