கர்நாடகாவின் நிதி பங்கை வழங்குங்கள் 'நிடி ஆயோக்'கிடம் சிவகுமார் கோரிக்கை
கர்நாடகாவின் நிதி பங்கை வழங்குங்கள் 'நிடி ஆயோக்'கிடம் சிவகுமார் கோரிக்கை
ADDED : செப் 02, 2026 11:57 PM

பெங்களூரு: கர்நாடகாவுக்கு உரிய நிதி பங்கை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, 'நிடி ஆயோக்' துணை தலைவரிடம், முதல்வர் சிவகுமார் வலியுறுத்தினார்.
பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்வர் சிவகுமாரை, நிடி ஆயோக் துணைத்தலைவர் அசோக் குமார் லஹிரி நேற்று சந்தித்தார்.
அப்போது சிவகுமார் பேசியதாவது:
தேசிய நலனை கருதி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாநிலங்கள் வளர்ந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். கூட்டாட்சி அமைப்பில் மத்திய, மாநில அரசுகள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். கர்நாடகாவுக்கு தேவையான அனைத்து ஆதரவையும், நிடி ஆயோக் வழங்க வேண்டும்.
கர்நாடகாவின் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. பிரதமரும் இதை ஒப்பு கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வரும் போது, டில்லிக்கு வருவதற்கு முன் பெங்களூரு வருவதை விரும்புகின்றனர் என்று கூறியிருந்தார். அதை பிரதமர் மோடியிடம் நான் கூறினேன்.
உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் நாங்கள் முன்னணியில் உள்ளோம். நாட்டிலேயே சிறந்த மனித வளத்தை கொண்டுள்ளோம்.
ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்காக ஆண்டிற்கு 50,000 கோடி ரூபாய் செலவு செய்கிறோம். சுற்றுலாவை மேம்படுத்துவது உட்பட பல திட்டங்கள் உள்ளன. இதனால் மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த நிதி உட்பட, கர்நாடகாவுக்கு கிடைக்க வேண்டிய உரிய நிதி பங்கை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அசோக்குமார் லஹிரி பேசுகையில், ''கர்நாடகாவின் வளர்ச்சியை கண்டு பெருமிதம் கொள்கிறேன்,'' என்றார்.
