/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கில் உண்மைகளை கண்டறிய... என்.ஐ.ஏ., விசாரணை!: அமித் ஷாவை சந்தித்து 8 மடாதிபதிகள் கோரிக்கை
/
தர்மஸ்தலா வழக்கில் உண்மைகளை கண்டறிய... என்.ஐ.ஏ., விசாரணை!: அமித் ஷாவை சந்தித்து 8 மடாதிபதிகள் கோரிக்கை
தர்மஸ்தலா வழக்கில் உண்மைகளை கண்டறிய... என்.ஐ.ஏ., விசாரணை!: அமித் ஷாவை சந்தித்து 8 மடாதிபதிகள் கோரிக்கை
தர்மஸ்தலா வழக்கில் உண்மைகளை கண்டறிய... என்.ஐ.ஏ., விசாரணை!: அமித் ஷாவை சந்தித்து 8 மடாதிபதிகள் கோரிக்கை
ADDED : செப் 04, 2025 11:18 PM

தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, ஏராளமான பெண்களின் உடல்களை புதைத்ததாக சின்னையா என்பவர் பொய் புகார் அளித்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவரை பின்னால் இருந்து இயங்கிய கும்பலை கைது செய்யவும், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்பிய 'யு - டியூபர்'களுக்கு, வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததாக கூறப்படுவது குறித்து, சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என, கர்நாடக அரசை பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் எஸ்.ஐ.டி., விசாரணை சிறப்பாக நடப்பதாக கூறி, மத்திய விசாரணை அமைப்புகளிடம் வழக்கை ஒப்படைக்க, கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
மிகவும் வேதனை இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கர்நாடகாவின் ஹரிஹரா பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி வசனானந்த சுவாமி, மங்களூரு குருபூர் வஜ்ரதேஹி மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ராஜசேகரானந்த சுவாமி உட்பட எட்டு மடாதிபதிகள், நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினர்.
'தர்மஸ்தலா விவகாரத்தில் மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினர் மீது அவதுாறு பரப்பப்படுகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை தண்டிக்க வேண்டும்.
தர்மஸ்தலா மீது அவதுாறு பரப்பப்படுவது மிகவும் வேதனை மற்றும் சகிக்க முடியாததாக உள்ளது. இந்த வழக்கில் உண்மையை கண்டறிய, விசாரணையை என்.ஐ.ஏ.,வுக்கு ஒப்படைக்க வேண்டும். சனாதன மற்றும் சமண தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, தங்கள் வேதனையை மடாதிபதிகள் வெளிப்படுத்தினர்.
அடுத்தகட்ட முடிவு தவிர, 2023ல் பெலகாவியில் கொலை செய்யப்பட்ட சமண துறவி நந்தி மஹாராஜா வழக்கு பற்றியும் எடுத்துக் கூறியதுடன், 'தர்மத்திற்காக பாடுபடும் மடாதிபதிகள், துறவிகளை பாதுகாக்கவும்; கோவில்கள் அவமதிப்பு செய்வதைத் தடுப்பது; சிலைகளை சேதம் செய்வதை தடுக்கவும் சட்டம் இயற்ற வேண்டும்' என்றும் மடாதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட அமித்ஷா, ''தர்மஸ்தலா வழக்கை நான் தனிப்பட்ட முறையில் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து அடுத்த கட்ட முடிவு எடுப்போம்.
''கோவில்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதுாறு பரப்பப்படுவதை தடுக்க, சட்டம் இயற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும்,'' என்றும் உறுதி அளித்தார்.
தங்கள் கோரிக்கையை மனுவாக அமைச்சரிடம் கொடுத்துவிட்டு, மடாதிபதிகள் புறப்பட்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்து உள்ளது.
யு - டியூபர் வீடு இதற்கிடையில் தர்மஸ்தலா வழக்கில், எஸ்.ஐ.டி., விசாரணையிலும் நேற்று சில முன்னேற்றங்கள் நடந்தன. தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்டதாக ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ உருவாக்கி, 'யு - டியூப்' பக்கத்தில் பதிவிட்ட, யு - டியூபர் சமீரின் பெங்களூரு பீன்யாவில் உள்ள, வாடகை வீட்டில் பெல்தங்கடி போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள சமீர், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக நீதிமன்றத்திடம் கூறினார்.
ஆனால் விசாரணை அதிகாரிகள் கேட்ட மடிக்கணினி, கணினியை அவர் சமர்ப்பிக்கவில்லை. இதனால் நேற்று அவரது வீட்டில் சோதனை நடந்தது தெரிய வந்துள்ளது. சோதனையில் சிக்கிய மடிக்கணினி, கணினி, சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
முழு ஒத்துழைப்பு இதுதவிர தர்மஸ்தலா சென்ற மகள் காணாமல் போனதாக, பொய் புகார் அளித்த சுஜாதா பட்டை நேர்காணல் செய்து, தர்மஸ்தலா பற்றி அவதுாறு வீடியோ வெளியிட்ட யு - டியூபர் அபிஷேக் என்பவரும், நேற்று முன்தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் கூறியதால் தான் சுஜாதா பட்டை நேர்காணல் செய்ததாகவும், தன் யு - டியூப் சேனலுக்கு பார்வையாளர்களை அதிகம் பெறும் நோக்கில், வீடியோ வெளியிட்டதாகவும் அபிஷேக் கூறி உள்ளார்.
தர்மஸ்தலாவில் 2012ல் கல்லுாரி மாணவி சவுஜன்யா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது பற்றியும், எஸ்.ஐ.டி., தற்போது விசாரிக்கிறது. சவுஜன்யா குடும்பத்தினர் அளித்த புகார் தொடர்பாக, உஜ்ரேயை சேர்ந்த உதய் ஜெயின் என்பவர் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரானார்.
நேற்று அவர் அளித்த பேட்டியில், ''சவுஜன்யா கொலை வழக்கு பற்றி, என்னிடம் எஸ்.ஐ.டி., விசாரிக்கவில்லை. தர்மஸ்தலாவில் உடல்கள் கிடந்ததை நீங்கள் பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்டனர். இல்லை என்றேன். மேலும் சில கேள்வி கேட்டனர். அதுபற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்,'' என்றார்.