'நைஸ்' நிறுவன கணக்கு தணிக்கை? மாஜி பிரதமர் தேவகவுடா சந்தேகம்!
'நைஸ்' நிறுவன கணக்கு தணிக்கை? மாஜி பிரதமர் தேவகவுடா சந்தேகம்!
ADDED : செப் 08, 2026 03:57 AM

பெங்களூரு: ''நைஸ் நிறுவன கணக்கு தணிக்கை நியாயமாக நடக்குமா,'' என்று முதல்வர் சிவகுமாருக்கு ம.ஜ.த., தேவகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வருக்கு தேவகவுடா எழுதியுள்ள கடிதம்:
சாலைகள், உள்கட்டமைப்பு வசதிக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் வீட்டு மனைகள் கட்ட அனுமதி இல்லை என்று, கடந்த 2016ம் ஆண்டு காங்கிரஸ் அரசு தான், உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
கையகப்படுத்தப்படும் நிலங்களில் வீட்டு மனைகள் கட்டுவது சட்டவிரோதமானது என்று உச்ச, உயர் நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தி உள்ளன. ஆனாலும் நைஸ் சாலை திட்டத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, அதே நிலத்தில் வீட்டு மனை கொடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
மாதவாரா, கெங்கேரி, கொம்மகட்டா, சோமபுரா, பண்டாரபாளையா உள்ளிட்ட பல கிராமங்களின் நிலங்கள் சாலை உள்கட்டமைப்பில் வருகிறது. நைஸ் நிறுவனம் பொது நலனை புறக்கணித்து தனிப்பட்ட ஆதாயத்தை ஈட்டியுள்ளது. நைஸ் நிறுவன கணக்குகளை தணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் நைஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு இருப்பதால், தணிக்கை நியாயமாக நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டு மனைகள் கொடுப்பதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படாது. மாறாக முதலீட்டாளர்களுக்கு தா ன் லாபம்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
தேவகவுடா அளித்த பேட்டி:
நைஸ் சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வீட்டுமனை வழங்க அரசு முடிவு செய்து இருப்பது தீய நோக்கம் கொண்டது. இதில் முறைகேடு நடக்கிறது. மத்திய அமைச்சர் குமாரசாமி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் ஆதாரங்களுடன் பேசுவார்.
அரசின் நடவடிக்கையை கண்காணித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம். விவசாயிகள் நிலம் கொள்ளை அடிக்கப்படுவதை நாங்கள் விடமாட்டோம். என்னிடம் சில ஆவணங்கள் உள்ளன. நைஸ் திட்டத்தின் கீழ் யார் எங்கு நிலம் வாங்கினர் என்று எனக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
