/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2047ல் வளமான நாடாக மாற வேண்டும்: சிந்தனை அமர்வில் நிர்மலா சீதாராமன் அழைப்பு
/
2047ல் வளமான நாடாக மாற வேண்டும்: சிந்தனை அமர்வில் நிர்மலா சீதாராமன் அழைப்பு
2047ல் வளமான நாடாக மாற வேண்டும்: சிந்தனை அமர்வில் நிர்மலா சீதாராமன் அழைப்பு
2047ல் வளமான நாடாக மாற வேண்டும்: சிந்தனை அமர்வில் நிர்மலா சீதாராமன் அழைப்பு
ADDED : டிச 22, 2025 06:36 AM

விஜயநகரா: ''வரும் 2047 ல் நாம் வளமான நாடாக மாற வேண்டும்,'' என்று, ஹம்பியில் நடந்த சிந்தனை அமர்வில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில், விஜயநகராவின் ஹம்பியில் 'வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற பெயரில் நேற்று சிந்தனை அமர்வு நடந்தது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். நிதி, பெருநிறுவன விவகார அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வணிகம் செய்வதை எளிதாக்குதல், வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான செயற்கை நுண்ணறிவு ஆகிய, மூன்று கருப்பொருள்களை மையமாக விவாதம் நடந்தது.
பங்களிப்பு மாநிலங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் நிதி கட்டமைப்பை வலுப்படுத்துவது, பெருநிறுவன பத்திர சந்தைகளை ஆழப்படுத்துதல், டிஜிட்டல் முறை கடன்களை விரிவு படுத்துதல், ஒழுங்கு முறை செலவுகளை குறைப்பது உட்பட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிர்மலா சீதாராமன் பேசுகையில், ''வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி, நாட்டின் மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும். வறுமை, ஏற்றதாழ்வுகளை குறைக்க வளம் அவசியம். 2047 ம் ஆண்டிற்குள் நாம் வளமான நாடாக வேண்டும் என்பதே லட்சியம். இதற்கான கூட்டு முயற்சிக்கு அனைவரின் பங்களிப்பும் அவசியம்,'' என்றார்.
முன்னதாக கமலாபுராவில் உள்ள ஹம்பி உலக பாரம்பரிய தள மேலாண்மை ஆணைய வளாகத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை, நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
நமது நாட்டை வரும் 2047ம் ஆண்டுக்குள் வளமான நாடாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். இதற்கு விஜயநகரா முழு உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பேரரசு செழிப்பாக இருந்தால், மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர் என்பதற்கு விஜயநகர பேரரசர்கள் ஆட்சி எடுத்துகாட்டாக உள்ளது.
இதுபோல நாட்டு மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும வாழ பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கிறார். நாட்டின் பொருளாதார நிலை குறித்து, இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை சிந்தனை கூட்டம் நடத்தப்படுகிறது. இம்முறை ஹம்பியில் நடத்தியது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.

