ADDED : ஜூலை 25, 2026 12:37 AM
மாண்டியா: ''மாண்டியாவின் கோழிப்பண்ணைகளில், சட்டவிரோத வங்கதேசத்தவர் தென்படவில்லை,'' என மாண்டியா எஸ்.பி., ஷோபா ராணி தெரிவித்தார்.
இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி: மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகாவின், ஸ்டார் சிக்கன் பண்ணைகளில், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக வசிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அந்த பண்ணைகளில், சோதனை நடத்தினோம். வங்கதேசத்தினர் இல்லை.
இந்தியாவின் பீஹாரின் 19 பேர், ஒடிஷாவின் 24 பேர், அசாம், சத்தீஸ்கரின் தலா இருவர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தின் தலா இருவர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது, விசாரணையில் உறுதியானது. அவர்கள் வைத்திருந்த ஆதார் கார்டுகள் உட்பட, அனைத்து ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்ததில், அந்நபர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இன்னும் விசாரணை முடியவில்லை.
இவர்களின் ஆதார்கார்டுகளை பரிசீலனைக்காக, அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பினோம். அங்குள்ள எஸ்.பி.,க்களிடம் இருந்து, அறிக்கை வந்த பின், எங்களுக்கு தெளிவான தகவல்கள் கிடைக்கும்.
கோழிப் பண்ணைகளில் பணியாற்றிய, 146 தொழிலாளர்கள் பற்றிய அறிக்கைகள் வந்துள்ளன. மற்ற தொழிலாளர்களின் அறிக்கைகளையும் விரைவில் அனுப்பும்படி கேட்டுள்ளோம். அனைத்தும் வந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
