குடிநீர் குழாய்களில் கசிவுகள் சரி செய்ய அதிகாரி உத்தரவு
குடிநீர் குழாய்களில் கசிவுகள் சரி செய்ய அதிகாரி உத்தரவு
ADDED : ஜூலை 03, 2025 11:02 PM

புலிகேசிநகர்: 'குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்' என, பெங்களூரு கிழக்கு மண்டல கமிஷனர் சினேகல் உத்தரவிட்டுள்ளார்.
புலிகேசிநகர் போலீஸ் நிலையம் முதல் ஹென்னுார் சாலை வரை உள்ள பகுதிகளில், நேற்று பெங்களூரு கிழக்கு மண்டல கமிஷனர் சினேகல் ஆய்வு செய்தார்.
அப்போது, கமிஷனர் சினேகல், அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை வழங்கினார்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அசெஞ்சர் தேவாலயம் சாலையில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும். புலிகேசிநகர் போலீஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மோசமான நிலையில் உள்ள சிமென்ட் ஸ்லாப்புகளால் பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, உடனடியாக மாற்ற வேண்டும்.
பானஸ்வாடியில் மரத்தை சுற்றி செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை அகற்ற வேண்டும். சட்டவிரோதமாக ஆப்டிக்கல் பைபர் கேபிள்களை நிறுவியவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இது போன்ற வாகனங்களை போக்குவரத்து போலீசார், தாமதமின்றி அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
