அழுகிய உருளைக்கிழங்கில் 'சிப்ஸ்' பேக்கரிக்கு ' சீல்' வைத்த அதிகாரிகள்
அழுகிய உருளைக்கிழங்கில் 'சிப்ஸ்' பேக்கரிக்கு ' சீல்' வைத்த அதிகாரிகள்
ADDED : ஜூலை 15, 2026 11:43 PM
பெங்களூரு: தரமற்ற உருளைக்கிழங்கு சிப்ஸ் விற்ற பேக்கரிக்கு, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின், சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
பெங்களூரின், சுங்கதகட்டே பிரதான சாலையில், 'ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வரா ஹாட் சிப்ஸ்' என்ற பெயரில் பேக்கரி கடை உள்ளது. இங்கு சுகாதாரமற்ற முறையில், தின்பண்டங்கள் தயாரித்ததாக கூறப்படுகிறது.
வாடிக்கையாளர் ஒருவர் இங்கு சிப்ஸ் வாங்கினார். இதில் அழுகிய வாடை வீசுவதையும், தரமின்றி இருப்பதையும் கவனித்தார். அவர் இது குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.
அதன்படி, ஜி.பி.ஏ., சுகாதாரப்பிரிவு அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று அதிகாலை அந்த பேக்கரியில் திடீரென சோதனை நடத்தினர். பேக்கரியின் குளறுபடிகளை கண்டுபிடித்தனர்.
பேக்கரியின் பின் பகுதியில், சுத்தமில்லாத இடத்தில், கறுப்பாகி போன பழைய எண்ணெயில், உருளைக்கிழங்கு சிப்ஸ் உட்பட, மற்ற தின்பண்டங்களை பொறித்தனர்.
அது மட்டுமின்றி சாப்பிட தகுதியற்ற, அழுகிய உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி, சிப்ஸ் தயாரிப்பதையும் கண்டுபிடித்தனர். தின்பண்டங்கள் தயாரிக்கும் இடத்தில், கரப்பான் பூச்சிகள், எலிகள் நடமாடின. இங்கு தயாரிக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பேக்கரிக்கு சீல் வைத்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
ப ணத்தாசையால் மக்களின் உயிரோடு விளையாடுவதை, எங்களால் சகிக்க முடியாது. இத்தகைய பேக்கரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பேக்கரியிலாவது தரமற்ற தின்பண்டங்கள் தயாரிப்பது தெரிந்தால், எங்களிடம் தகவல் கூறுங்கள். கடும் நடவடிக்கை எடுக்கிறோம்.
மக்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சிப்ஸ் தயாரித்த ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வரா பேக்கரியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. கடைக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
