காபி தோட்டத்தில் மாயமான ஒன்றரை வயது குழந்தை மீட்பு
காபி தோட்டத்தில் மாயமான ஒன்றரை வயது குழந்தை மீட்பு
ADDED : மே 09, 2026 02:19 AM

பெங்களூரு: காணாமல் போன, ஒன்றரை வயது ஆண் குழந்தை, 12 மணி நேரத்துக்கு பின் கண்டு பிடிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சில குடும்பத்தினர், காபி தோட்டத்தில் வேலை செய்வதற்காக, சிக்கமகளூகு மாவட்டம் மூடிகெரே தாலுகாவின், கெளகூர் கிராமத்துக்கு வந்துள்ளனர்.
இவர்களுடன் கோனு - சோனு தம்பதி, தங்களின் ஒன்றரை வயது, சிவம் என்ற ஆண் குழந்தையுடன் வந்துள்ளனர். குழந்தையை பார்த்து கொள்ள, ஒரு பெண்ணை அவர்கள் வைத்திருந்தனர்.
நேற்று முன் தினம் மாலை பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, குழந்தை விடாமல் அழுததால், சிறுமி ஒருவரிடம் குழந்தையை கொடுத்து, காபி தோட்டத்தில் வேலை பார்க்கும் பெற்றோரிடம் சேர்க்கும்படி, அந்த பெண் அனுப்பினார்.
ஆனால் அந்த சிறுமி, சிறிது துாரம் சென்ற பின், குழந்தையை சாலையிலேயே விட்டு, வீட்டுக்கு சென்று விட்டார்.
இரவு பணி முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், குழந்தை காணாததால் பதற்றம் அடைந்தனர். சுற்றுப்புறங்களில் தேடி பார்த்தனர். பின், பாளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசாரும், மோப்ப நாயுடன் அங்கு வந்து, குழந்தையை தேட துவங்கினர்.
இரவு முழுதும் அடர்த்தியான காபி தோட்டத்தில் குழந்தையை போலீசார் தேடினர். 12 மணி நேரம் தேடுதலுக்கு பின், நேற்று காலையில் அந்த குழந்தையை கண்டுபிடித்தனர்.
வீட்டில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளம் அருகில், மழையில் நனைந்த நிலையில், நடுங்கியபடி குழந்தை காணப்பட்டது. அங்கிருந்து மீட்ட போலீசார், அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தை மீட்கப்பட்ட இடம், வ ன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி. குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது. குழந்தையை மீட்ட போலீசாரை பலரும் பாராட்டி னர்.
