கே.ஜி.ஹள்ளி கலவர வழக்கு 5 ஆண்டுக்கு பின் ஒருவர் கைது
கே.ஜி.ஹள்ளி கலவர வழக்கு 5 ஆண்டுக்கு பின் ஒருவர் கைது
ADDED : ஏப் 27, 2025 07:29 AM

கார்வார் : முகமது நபியை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்தால், கடந்த 2020ம் ஆண்டு பெங்களூரு கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி பகுதியில் கலவரம் வெடித்தது. போலீஸ் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தீ வைத்து எரிக்கப்பட்டன.
காவல் பைரசந்திராவில் உள்ள முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடும் தீக்கிரையானது. சி.சி.பி., போலீசார் 300க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின், வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது.
இந்த கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட, பி.எப்.ஐ., உறுப்பினர், உத்தர கன்னடாவின் சிர்சியின் இம்தியாஸ் சுகூர் என்கிற மவுசின் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் இம்தியாஸ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் விஜயபுராவின் சிந்தகியில் இம்தியாஸ் வசிப்பதாக, உத்தர கன்னடா எஸ்.பி., நாராயணுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் சிந்தகி சென்ற, சிர்சி போலீசார் குழு இம்தியாஸை கைது செய்தது. அவரை சிர்சி அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
இதுபற்றி சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கலவரம் நடந்த பின், ஹைதராபாத் தப்பிச் சென்ற இம்தியாஸ், அங்கு சில மாதங்கள் வசித்துவிட்டு, சிந்தகிக்கு வந்தது தெரிய வந்தது.
