ADDED : ஜூன் 06, 2026 11:39 PM

மைசூரு: மைசூரில் மர்மமான முறையில் கார் ஓட்டுநர் இறந்ததில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மைசூரு நகர் ஹெப்பாலில் உள்ள பைரேஸ்வரா நகரை சேர்ந்தவர் நாகராஜு, 48. தனியார் நிறுவனத்தின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 2ம் தேதி, உன்னதி நகர் வெளிவட்ட சாலையில், சாலை ஓரத்தில் இருந்த மணலில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதை அவ்வழியாக சென்ற, நாகராஜு பணியாற்றும் அதே நிறுவனத்தின் மற்றொரு கார் ஓட்டுநர், தனது நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்களும், நாகராஜின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு நாகராஜு சகோதரர் வெங்கடேஷ் வந்து பார்த்தார்.
அப்போது காரில் இருந்து 5 அடி தள்ளி, நாகராஜு விழுந்து கிடந்தார். அத்துடன் அவரின் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகம் அடைந்த வெங்கடேஷ், என்.ஆர்., போலீசில் புகார் அளித்தார்.
நாகராஜுவின் மொபைல் போனை 'டிராக்' செய்தபோது, விபத்து நடப்பதற்கு, 40 விநாடிகளுக்கு முன், அந்த எண்ணில் இருந்து மற்றொரு எண்ணுக்கு அழைப்பு சென்றதை கண்டுபிடித்தனர்.
அந்த எண்ணை வைத்து, மைசூரு பன்னிமண்டபம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்த ஹசினா பானுவிடம் போலீசார் விசாரித்தனர். அதற்கு அவர், 'என் உறவினர் முஜாஹித் கான் எனக்கு போன் செய்தார்' என தெரிவித்தார்.
முஜாஹித் கானை பிடித்து விசாரித்த போது, சம்பவ தினத்தன்று அதிகாலை 4:30 மணிக்கு அத்தை வீட்டில் இருந்து வந்து கொண்டிருந்தபோது, விபத்தை பார்த்துள்ளார்.
அருகில் சென்று பார்த்தபோது, நாகராஜின் மூக்கில் இருந்த ரத்தம் வந்ததாகவும், வாயில் இருந்து நுரை போன்று திரவம் வந்ததாகவும் கூறினார். அத்துடன், அவரை எழுப்ப முஜாஹித் கான் முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
பயணியர் அமரும் வழி கதவை திறந்து, நாகராஜுவின் தோளில் இருந்த பாதுகாப்பு பெல்டை அகற்றினார். பின், அவரை, மணல் மீது படுக்க வைத்தார். நாகராஜுவின் மொபைல் போன், பெல்ட், டேட்டா கேபிள்களை எடுத்து சென்றார். நாகராஜுவின் சிம் கார்டை அகற்றி, தன் மொபைல் போனில் பொருத்தி, அத்தைக்கு போன் செய்ததாக தெரிவித்து உள்ளார்.
'பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, நாகராஜுவின் மரணத்துக்கு காரணம் தெரிய வரும்' என, என்.ஆர்.போலீசார் தெரிவித்தனர்.
