/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆன்லைன்' சூதாட்டத்தால் நான்கு ஆண்டுகளில் 35 பேர் தற்கொலை: மாணவர்களும் அடிமையாவதால் அதிகாரிகள் கவலை
/
'ஆன்லைன்' சூதாட்டத்தால் நான்கு ஆண்டுகளில் 35 பேர் தற்கொலை: மாணவர்களும் அடிமையாவதால் அதிகாரிகள் கவலை
'ஆன்லைன்' சூதாட்டத்தால் நான்கு ஆண்டுகளில் 35 பேர் தற்கொலை: மாணவர்களும் அடிமையாவதால் அதிகாரிகள் கவலை
'ஆன்லைன்' சூதாட்டத்தால் நான்கு ஆண்டுகளில் 35 பேர் தற்கொலை: மாணவர்களும் அடிமையாவதால் அதிகாரிகள் கவலை
UPDATED : பிப் 10, 2026 07:22 AM
ADDED : பிப் 10, 2026 04:35 AM

முன்பெல்லாம் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்தன. இப்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. இருக்கும் இடத்தில் இருந்தே, கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சக்கணக்கான ரூபாயை கொள்ளை அடிக்கின்றனர்.
சமீப ஆண்டுகளாக, ஆன்லைன் விளையாட்டுகளில் இளைஞர்கள், குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மொபைல் போனில் விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளும் உள்ளன. லைவ் காசினோக்கள், பான்டசி கேம் ட்ரீம் 11, எம்.பி.எல்., போன்ற பிளாட்பார்ம்களும் உள்ளன. ஆன்லைன் ரம்மி, லாட்டரி உட்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு இளைஞர்கள் அடிமையாகின்றனர்.
இவற்றில் லட்சக்கணக்கான ரூபாயை இழக்கின்றனர். கடனாளியாகி அவதிப்படுகின்றனர். ஆன்லைன் கேம்களில் இருந்து விடுபட முடியாமலும், கடனாளியாகியும், தற்கொலை செய்து கொள்கின்றனர். கர்நாடகாவில் கடந்த நான்கு ஆண்டுகளில், 35 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்தகைய சம்பவங்கள், அதிகாரிகளுக்கு கவலையை அளித்துள்ளன.
இதுதொடர்பாக, மாநில உள்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டம் தொடர்பாக, கடந்த நான்கு ஆண்டுகளில், 468 வழக்குகள் பதிவாகியுள்ளன. சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த, 35 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் மாணவர்கள் என்பது, கவலைக்குரிய விஷயமாகும். ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து, மாணவர்கள், இளைஞர்கள், சிறார்களை காப்பாற்ற, கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பள்ளிகள், கல்லுாரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து உரையாற்றுவதுடன், வீடியோக்கள் மூலமாகவும் விவரிக்கிறோம்.
ரோந்துப்பணியில் ஈடுபடும் போது, இளைஞர்கள், பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தி, ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட கூடாது என்று எச்சரிக்கிறோம்.
ஆன்லைன் சூதாட்டங்கள் நடக்கும் இடங்களில், அதிரடி சோதனை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது, வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக போலீஸ் சட்டம் - 2021 பிரிவு 2ல், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இது கு றித்து, சிலர் உயர் நீதிமன்றத்தில் சட்ட திருத்தத்துக்கு தடையுத்தரவு பெற்றனர்.
அதனால், வழக்கு பதிவு செய்வதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தடையை நீக்கும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மனு விசாரணை கட்டத்தில் உள்ளது. பொது மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

