/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேலவை தலைவர் உத்தரவை அடுத்து தர்ணாவை கைவிட்ட எதிர்க்கட்சிகள்
/
மேலவை தலைவர் உத்தரவை அடுத்து தர்ணாவை கைவிட்ட எதிர்க்கட்சிகள்
மேலவை தலைவர் உத்தரவை அடுத்து தர்ணாவை கைவிட்ட எதிர்க்கட்சிகள்
மேலவை தலைவர் உத்தரவை அடுத்து தர்ணாவை கைவிட்ட எதிர்க்கட்சிகள்
ADDED : ஜன 31, 2026 05:16 AM
பெங்களூரு: கவர்னரை அவமதிப்பாக பேசிய, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத்தை சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என, எதிர்க்கட்சியினர் நடத்திய தர்ணாவை வாபஸ் பெற்றதால் மேல்சபை கூட்டம் சுமுகமாக நடந்தது.
மேல்சபையில் நேற்று முன் தினம் கூட்டம் நடந்த போது, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத், 'கவர்னருக்கு கையை காட்டுவதற்கு பதில், காலை காட்ட வேண்டுமா' என, அவதுாறாக பேசியதால், பா.ஜ.,வினர் கொதிப்படைந்தனர். ஹரிபிரசாத்தை சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என, தர்ணா நடத்தினர். இதனால் கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கூட்டம் துவக்கம் இந்நிலையில் நேற்று காலையில் மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூட்டத்தை துவக்கினார்.
எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி : காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என, சபையில் நாங்கள் தர்ணா நடத்தினோம். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இது குறித்து உத்தரவிடுங்கள்.
சபையின் நேரத்தை பாழாக்க வேண்டும் என்ற நோக்கம், எங்களுக்கு இல்லை. சபை நல்ல முறையில் நடக்க வேண்டும் என, நாங்கள் விரும்புகிறோம். ஆனால் கவர்னரை பற்றி, உறுப்பினர் பயன்படுத்திய வார்த்தை, யாருக்கும் மதிப்பை தராது. பொது வாழ்க்கையில் உள்ளவர்கள், இது போன்று பேசுவது சரியா.
ஹரிபிரசாத்தை சஸ்பெண்ட் செய்யும்படி வலியுறுத்தி, நாங்கள் தர்ணா நடத்துகிறோம். நீங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், சபையை துவக்குவது சரியா? என்ன வேண்டுமானாலும் பேசலாமா. சபைக்கு மதிப்பு, மரியாதை இல்லையா. பொது வாழ்க்கையில் உள்ள நமக்கு மதிப்பும், கவுரவமும் உள்ளது. இது போன்று கவர்னரை பேசுவது சரியா.
இந்த கட்டத்தில், காங்கிரசின் தலைமை கொறடா சலீம், நாகராஜ் யாதவ், பா.ஜ.,வின் ரவிகுமார் பேச முற்பட்டனர். ஆனால் சபை தலைவர் ஹொரட்டி, 'யாரும் பேசாதீர்கள்' என உத்தரவிட்டார்.
நீட்டிக்காதீர் பா.ஜ., - விஸ்வநாத்: இதற்கு முன், குண்டுராவ் முதல்வராக இருந்த போது, தேவராஜ் அர்ஸ் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது உணவுத்துறை அமைச்சராக இருந்த இப்ராகிம், பயன்படுத்திய வார்த்தையை கட்சி, பாகுபாடு இன்றி அனைவரும் கண்டித்தனர். இதனால், சபையில் இருந்து இப்ராகிம் வெளியேறினார். சபையில் சம்பவம் நடந்துவிட்டது. பேச்சு அவசரத்தில் வார்த்தை வந்துள்ளது. இனியும் இதை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பசவராஜ் ஹொரட்டி: ஊடகங்களில் என்ன வருகிறது என்பதை, அனைவரும் கவனியுங்கள். சபையின் கூட்டம் நல்ல முறையில் நடக்க வேண்டும். வீடு என்றால் ஒரு வார்த்தை வரும், போகும். அதை பெரிதுபடுத்தி விவாதம் ஆக்கக்கூடாது.
இனி சபையில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல், நான் எச்சரிக்கையாக இருக்கிறேன். ஒருவேளை யாராவது அத்துமீறி நடந்து கொண்டால், அவர்கள் மீது தயவு, தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பேன்.
இதனால் எதிர்க்கட்சியினர் சமாதானம் அடைந்து, தர்ணாவை வாபஸ் பெற்றனர். அதன்பின் கேள்வி நேரம் துவங்கியது.

