மோடி குறித்து விமர்சனம் நடிகர் கிஷோருக்கு எதிர்ப்பு
மோடி குறித்து விமர்சனம் நடிகர் கிஷோருக்கு எதிர்ப்பு
ADDED : மே 21, 2026 02:13 AM

பெங்களூரு: பெட்ரோல், டீசல், வீட்டில் இருந்து வேலை செய்யும் படி கூறிய பிரதமர் மோடியின் கருத்துக்கு, கன்னட நடிகர் கிஷோரின் பதிவுக்கு, பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
'தங்கம் வாங்குவதை குறையுங்கள்; பெட்ரோல், டீசல் விலை உயர்வால் முடிந்தளவு வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள்' என, சில நாட்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
முட்டாள்தனம்
இதற்கு கன்னட நடிகர் கிஷோர் குமார், தனது முகநுால் பதிவில், 'அடுத்த அறிவிப்பு; உயிரியல் சாராத இந்த அரசு, மாசுபாட்டை கையாள திறனற்றதாக இருப்பதாலும், ஹஸ்தேவ் தல் நிக்கோபார் வரையிலான நமது காடுகளை, 'மிஸ்டர் ஏ'வுக்கு விற்பதில் மும்முரமாக இருப்பதாலும், இந்தியாவை உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக மாற்றுவதாலும், பொது மக்கள், தங்கள் சுவாசத்தை 25 சதவீதம் குறைத்து, தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரின் பதிவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
அதில், 'இது தான் விழிப்புணர்வு மற்றும் தயார் நிலை எனப்படுகிறது. சிங்கப்பூர், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் பிரதமர்கள் கூட, பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மத்திய கிழக்கில் போர் எவ்வளவு துாரம் பரவக்கூடும் என்பது யாருக்கும் தெரியாது' என ஒருவர் கூறியுள்ளார்.
'நீங்கள் நல்ல நோக்கங்கள் கொண்ட ஒரு புத்திசாலியான நடிகர் என்று நினைத்தேன். ஆனால் இந்தளவுக்கு விமர்சனம் செய்வது ஒரு மலிவான, முட்டாள்தனமான செயல்' என மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
சிக்கல் 'நாடு சிக்கலில் இருக்கும்போது, ஒரு முறையாவது பொறுப்புள்ள குடிமகனை போன்று நடந்து கொள்ளுங்கள். பிரதமர் மீது உங்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதற்காக நாட்டை சிக்கலில் தள்ளாதீர்கள்' என, இன்னொருவரும் கருத்து பதிவிட்டிருந்தார்.
மேலும், பலர், 'நீங்கள் ஒரு பக்குவமான நபர் என்று நினைத்தேன். ஆனால், நீங்கள் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்கிறீர்கள். மக்கள் நலனில் உங்களின் பங்களிப்பு பூஜ்ஜியம் தான்' என, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
