மீட்கப்பட்ட 131 பசுக்களில் 67 மாயமானதால் பரபரப்பு
மீட்கப்பட்ட 131 பசுக்களில் 67 மாயமானதால் பரபரப்பு
ADDED : ஜூலை 22, 2026 11:25 PM
தார்வாட்: ஹூப்பள்ளி - தார்வாடில் இறைச்சிக்காக சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 131 பசுக்கள் மீட்கப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டதில், 67 பசுக்கள் மாயமாகி. இதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்திய ஹிந்து ஆதரவு அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனாலும், சட்ட விரோதமாக இறைச்சிக்காக பசுக்கள் கடத்துவது தொடர்கிறது.
இவ்வாறு கடத்தப்படும் பசுக்கள் குறித்து தகவல் அறியும் சில ஹிந்து அமைப்பினர், பசுக்களை கடத்தும் வாகனத்தை நிறுத்தி, கால்நடைகளை மீட்டு போலீசில் ஒப்படைப்பர்.
தார்வாட் மாவட்டத்தின் ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஜூன் 20ம் தேதி வெளி மாநிலத்துக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட்ட மற்றும் சாலைகளில் சுற்றித்திரிந்த 131 பசுக்களை, பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட பசுக்கள், ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சியின் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், மீட்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பசுக்கள் உள்ள இடத்துக்கு வந்த அவர்கள், பசுக்களை எண்ணியபோது, 67 பசுக்கள் மாயமானதை கண்டறிந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர்கள், நேற்று மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி, கால்நடை துறை, போலீஸ் கமிஷனர் அலுவலகங்களிடம் முறையிட்டும், பலனில்லை. மூன்று துறைகளிடமும் ஒருங்கிணைப்பு இல்லாததால், சட்ட விரோத பசுக்கள் கடத்தல் நடந்து வருகிறது.
சட்ட விரோதமாக மாடுகள் கடத்தப்படுவதை தடுக்க, சிறப்பு படை அமைக்க வேண்டும். இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வரும் நாட்களில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின், அலுவலகத்தை முற்றுகையிட முற்பட்ட பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை போலீசார் கைது செய்து, விடுவித்தனர்.
