/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மடாதிபதி மிருத்ஞ்செய சுவாமிக்கு எதிராக திரும்பிய பஞ்சமசாலி சமூகம்
/
மடாதிபதி மிருத்ஞ்செய சுவாமிக்கு எதிராக திரும்பிய பஞ்சமசாலி சமூகம்
மடாதிபதி மிருத்ஞ்செய சுவாமிக்கு எதிராக திரும்பிய பஞ்சமசாலி சமூகம்
மடாதிபதி மிருத்ஞ்செய சுவாமிக்கு எதிராக திரும்பிய பஞ்சமசாலி சமூகம்
ADDED : ஏப் 13, 2025 06:47 AM

ஹூப்பள்ளி : மடாதிபதி பசவ ஜெய மிருத்ஞ்செய சுவாமியை, கூடலசங்கமா பஞ்சமசாலி மடத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, பஞ்சமசாலி அறக்கட்டளையினர் ஆலோசித்துள்ளனர்.
பாகல்கோட் கூடலசங்கமாவில் உள்ள பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதியாக பசவ ஜெய மிருத்ஞ்செய சுவாமி இருந்து வருகிறார்.
முந்தைய பா.ஜ., ஆட்சியின்போது, பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு வழங்கக்கோரி, பாகல்கோட்டில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரையும், நுாறு நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் கவனத்தை ஈர்த்தார்.
இறுதியில் '2டி' இடஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவிட்டது. தற்போதும் '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு, காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராடி வருகிறார்.
இதற்கிடையில் பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மற்ற தலைவர்களை கண்டுகொள்ள மறந்தததாகவும் மடாதிபதி மீது சமீப காலமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீக்க உரிமை
சமூகத்தின் நலன்களை மறந்துவிட்டு, அரசியல் செய்ய நினைக்கிறார் என்றும் அவர் மீது பழி விழுந்தது. இதனால் மடத்தின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று ஒரு சிலர் பகிரங்கமாக கூறினர்.
இந்நிலையில், ஹூப்பள்ளியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு பஞ்சமசாலி அறக்கட்டளையினர் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர், பா.ஜ., முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானியும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அறக்கட்டளை தலைவர் மோகன் லிம்பிகே பேசுகையில், ''பஞ்சமசாலி சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் 2008ம் ஆண்டு, கூடலசங்கமாவில் பஞ்சமசாலி மடம் கட்டப்பட்டு, அதன் தலைவராக பசவ ஜெய மிருத்ஞ்செய சுவாமியை நம் அறக்கட்டளை நியமித்தது.
''அவரை பதவியில் இருந்து நீக்கவும் நமக்கு உரிமை உள்ளது. சமூகத்தை கட்டியெழுப்புவார் என்று நினைத்தால், ஒரு நபரின் பேச்சை கேட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார். அவர் தன் நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரிடம் இருந்து தலைவர் பதவியை பறிப்பது பற்றி முடிவு எடுப்போம்,'' என்றார்.
தேவை இல்லை
இந்த கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் அளித்த பேட்டி:
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது, போராட்டம் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்தியது மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி தான். அரசுக்கு எதிராக அவதுாறு பரப்பினார். இதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.
பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறோம். பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, பா.ஜ.,வுடன் எங்களுக்கு தெரியாமல் மடாதிபதி ஒப்பந்தம் செய்து '2டி' இடஒதுக்கீட்டிற்கு சம்மதித்தார். ஒப்பந்தம் மூலம் கிடைத்த பணத்தில் பல இடங்களில் நிலம், சொத்து வாங்கி உள்ளார். அறக்கட்டளை விதிக்கு உட்பட்டு தான் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தனிநபரையோ, அரசியல் கட்சியையோ ஆதரித்து செயல்பட்டால் அவர் தலைவர் பதவிக்கு தேவை இல்லை.
தன் போக்கை மாற்றாவிட்டால் மடாதிபதிக்கு எதிராக, கட்சி சார்பின்றி அனைவரும் ஒன்று கூடி நடவடிக்கை எடுப்போம்.
அறக்கட்டளையில் உள்ளவர்களை பன்றி என்று விமர்சித்த எத்னாலுடன், மடாதிபதி கைகோர்ப்பது சரியா? எத்னால் தன்னை தானே முதல்வர் என்று அறிவித்துக் கொள்கிறார். தைரியம் இருந்தால் அவர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யட்டும். அவருக்கு பஞ்சமசாலி மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு கூறினார்.

