ADDED : அக் 27, 2025 03:47 AM
நெலமங்களா: வீட்டின் முன்பு நின்ற, கிராம பஞ்சாயத்து கவுன்சிலரை துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு ரூரல் நெலமங்களா இஸ்லாம்புரா கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் சலீம், 37. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நேற்று மாலை 6:00 மணிக்கு தன் வீட்டின் முன்பு நின்றார். அப்போது பைக்கில் இருவர் வந்தனர்.
பின்னால் அமர்ந்திருந்தவர் துப்பாக்கியை எடுத்து, சலீமை நோக்கி சுட்டார். சுதாரித்து கொண்ட சலீம் வீட்டிற்குள் ஓட முயன்றார். அவரது வலது கையில் குண்டு துளைத்தது. பைக்கில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பினர்.
சலீமை குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மீட் டு நெலமங்களா தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கையில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது.
சலீமை கொல்ல முயன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. நிலத்தகராறு அல்லது பண பிரச்னையில் கொல்ல முயற்சி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், நெலமங்களா ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர். துப்பாக்கியால் சுட்ட இருவரையும் தேடிவருகின்றனர்.
