ADDED : மே 28, 2026 03:06 AM

பெலகாவி: பைல ஹொங்களா நகரின், தாலுகா மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால், பதற்றம் ஏற்பட்டது.
பெலகாவி மாவட்டம், பைலஹொங்களா நகரின், தாலுகா மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே கூரையில், நேற்று காலை பாம்பு படம் எடுத்து நின்றது. இதை கண்ட நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் கிலி அடைந்தனர்.
இது குறித்து, பாம்பு பிடி நிபுணர் மல்லிகார்ஜுன கானிகேராவுக்கு தகவல் கூறப்பட்டது.
அவர் அந்த மருத்துவமனைக்கு விரைந்தார். பாம்பை பிடிக்க முயற்சித்தார். ஆனால் பாம்பு அவரது கையில் சிக்காமல், அங்கிருந்த கட்டைகளுக்குள் புகுந்து கொண்டது. அவர் நீண்ட நேரம் போராடி, ஆறடி நீளமான பாம்பை பிடித்து, பையில் அடைத்து, வனப்பகுதியில் விட்டார்.
அவர் கூறுகையில், ' ' இதற்கு முன் பாம்பை கண்டால், மக்கள் உடனடியாக அடித்து கொல்வர். ஆனால், இப்போது அவர்களின் மனநிலை மாறியுள்ளது. பாம்புகளும் நம்மை போன்று உயிரினம் என்பதை புரிந்து கொண்டனர். உண்மையில் இது பாராட்டத்தக்கது ,' ' என்றார்.
