/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குமாரசாமி குற்றச்சாட்டு பரமேஸ்வர் பதிலடி
/
குமாரசாமி குற்றச்சாட்டு பரமேஸ்வர் பதிலடி
ADDED : ஜன 07, 2026 05:16 AM

பெங்களூரு: ''பல்லாரி கலவரத்தில் இறந்த காங்கிரஸ் தொண்டர் உடல், இரு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை, மத்திய அமைச்சர் குமாரசாமி நேரில் பார்த்தாரா,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பல்லாரி கலவரத்தில் இறந்த, காங்கிரஸ் தொண்டர் ராஜசேகர் ரெட்டி உடல் இரு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறி உள்ளார். அப்படி செய்யப்பட்டதை அவர் நேரில் பார்த்தாரா. பிரச்னையை முதலில் புரிந்து கொண்டு பேச வேண்டும்.
வாய்க்கு வந்ததை பேசினால், சமூகத்தில் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். பிரேத பரிசோதனை ஒரு முறை மட்டுமே நடந்ததாக, டாக்டர் கூறுகிறார்.
நான், மூன்றாவது முறையாக உள்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறேன். எந்த சூழ்நிலையில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். கடந்த 38 ஆண்டுகளாக எனக்கு அரசியல் அனுபவம் உள்ளது.
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியும். குமாரசாமி மத்திய அமைச்சர். அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியும். ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அரசுக்கு சான்றிதழ் வழங்க கூடாது.
முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் சாதனையை சித்தராமையா முறியடித்து உள்ளதற்கு, அவருக்கு எனது வாழ்த்துகள். முதல்வர் சாதனை படைக்க அனுமதித்த சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், சுர்ஜேவாலாவுக்கும் நன்றி. இதுபோன்ற வாய்ப்புகள் காங்கிரசில் மட்டுமே சாத்தியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

