ADDED : ஆக 22, 2026 11:17 PM

- நமது நிருபர் -
நாடு முழுதும், கடந்த வாரம், 80வது சுதந்திர நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சுதந்திர தினத்தை கொண்டாடினர். ஆனால், பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், வித்தியாசமான முறையில் சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
பொதுவாக சுதந்திர தினம் என்றால், வீடுகள், வாகனங்களின் மீது கொடியேற்றி, இனிப்பு வழங்குவது வழக்கம். அனைவரும் தங்களுக்கு தெரிந்த வகையில், சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றனர்.
ஐந்து, 10 நிமிடம் கொண்டாடிய பின், நண்பர்கள், குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க, பிடித்தமான இடங்களுக்கு செல்கின்றனர்.ஆனால், நாள் முழுதும் சுதந்திர தினத்தை கொண்டாடும் முத்தப்பா, தன் தேசபக்தியை வெளிப்படுத்துகிறார்.
பாகல்கோட் மாவட்டம், ஹுன்குந்த் தாலுகாவின், சூளபெலே கிராமத்தில் வசிப்பவர் முத்தப்பா, 45. இவர் முடி திருத்தும் கடை நடத்துகிறார்.
இதில் கிடைக்கும் சொற்ப வருவாயில், குடும்பத்தை நிர்வகிக்கிறார்.
சுதந்திர தினத்தன்று தன் கடையை, மூவர்ண தேசிய கொடிகளால் அலங்கரிக்கிறார். அன்றைய தினம் முழுதும் தன் கடைக்கு வரும் யாரிடமும் பணம் வாங்குவது இல்லை.
இலவசமாக முடி திருத்துகிறார்; முகச்சவரம் செய்கிறார்.
கிராமத்தில் வசிக்கும் முதியவர் கூறிய ஆலோசனைப்படி, கடந்த, 21 ஆண்டுகளாக இந்த சேவையை முத்தப்பா செய்து வருகிறார்.
மற்ற நாட்களிலும், மூத்த குடிமக்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தருவது, இலவசமாக முடி திருத்துவது போன்ற சேவைகளை செய்கிறார்.
நாட்டுக்காக பெரிய அளவில் சேவை செய்ய முடியாவிட்டாலும், தன் தொழில் மூலமாகவே சமுதாயத்துக்கு சேவை செய்யும் இவருக்கு, கிராமத்தில் நல்ல பெயர் உள்ளது. இவரது தேசப்பற்று அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
