/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொல்லுார் நதியில் அடித்து செல்லப்பட்ட பெங்., பெண்
/
கொல்லுார் நதியில் அடித்து செல்லப்பட்ட பெங்., பெண்
ADDED : ஆக 30, 2025 11:05 PM

கொல்லுார்: பெங்களூரை சேர்ந்த பெண், உடுப்பி சவுபர்ணிகா நதியில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். உடலை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு, தியாகராஜநகரை சேர்ந்தவர் வசுதா, 46. இவர், உடுப்பி கொல்லுார் மூகாம்பிகை தேவியின் தீவிர பக்தை. அவ்வப்போது கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மூகாம்பிகையை தரிசிக்க, காரில் சென்றார். சுவாமியை தரிசித்த பின், சவுபர்ணிகா நதி அருகில் வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நதியில் விழுந்த அவர், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக கோவில் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக நீச்சல் வீரர்களை வரவழைத்து, வசுதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதேவேளையில் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது; தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்தனர்.
நேற்று முன்தினம் மாலை வரை தேடியும் வசுதா கிடைக்கவில்லை. நதியில் வெள்ளம் அதிகரித்துக் கொண்டே சென்றதால், தேடும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
அங்கு வந்த கொல்லுார் போலீசார், வசுதாவின் காரில் இருந்த மொபைல் போன் மூலம், அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நேற்று கொல்லுார் வந்தடைந்தனர்.
கோவிலுக்கு வந்தவர், மொபைல் போனை காரிலேயே வைத்துச் சென்றது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளதாக கூறிய போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.