கிரிக்கெட் வீராங்கனையருக்கு ஓய்வூதியம் அறிவிப்பு
கிரிக்கெட் வீராங்கனையருக்கு ஓய்வூதியம் அறிவிப்பு
ADDED : ஏப் 03, 2026 03:16 AM
பெங்களூரு: முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க உள்ளதாக, கர்நாடகா கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகா கிரிக்கெட் சங்கம், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையருக்கு வழங்கும் மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்து உள்ளது. இதன்படி, 55 வயதான முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். சீனியர் மகளிர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில், கர்நாடகா அணி சார்பாக பங்கேற்றவர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்.
நிகழ்காலத்தில், பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் வீராங்கனையருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. இத்திட்டம், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையருக்கு கவுரவத்தையும், அவர்களுக்கு நிதியுதவியையும் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
