தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பட்டாசு வெடிப்பதை கட்டுப்படுத்த ஏ.ஐ., கேமரா பொருத்தும் போலீசார்

 பட்டாசு வெடிப்பதை கட்டுப்படுத்த ஏ.ஐ., கேமரா பொருத்தும் போலீசார்

 பட்டாசு வெடிப்பதை கட்டுப்படுத்த ஏ.ஐ., கேமரா பொருத்தும் போலீசார்


ADDED : நவ 20, 2025 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நிர்ணயித்த நேரத்தை மீறி, பட்டாசு வெடித்து அக்கம், பக்கத்தினருக்கு தொல்லை தரும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏ.ஐ., அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரில் இரவு 10:00 மணிக்கு பின்னரும், தங்களின் வீட்டு அருகில் பட்டாசு வெடித்து துாங்க விடாமல், தொந்தரவு கொடுப்பதாக, நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் பல புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில், மிக அதிகமான புகார்கள் வருகின்றன.

தீபாவளி மட்டுமின்றி, பிறந்த நாள் பார்ட்டிகள், திருமண ஆண்டு விழாக்கள், முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாள் உட்பட, பல்வேறு காரணங்களை முன்னிட்டு, நள்ளிரவில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இது குறித்து புகார் வந்தால் ஹொய்சளா போலீசார் அங்கு சென்று, பிரச்னையை சரி செய்கின்றனர்.

இரவில் பட்டாசு வெடிப்பது குறித்து, பொது மக்கள் இனி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, புகார் அளிக்க தேவையில்லை. 'நிர்பயா' திட்டத்தின் கீழ், பெங்களூரு முழுதும் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்கள், பட்டாசு வெடிப்போரை கண்டுபிடித்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும்.

தீபாவளி நேரத்தில், நகர போலீசார் நிர்ணயித்த நேரத்தை தாண்டி, பட்டாசு வெடிப்போரை கண்டுப்பிடிக்க, ஏ.ஐ., தொழில்நுட்பம் அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

ஸ்ரீராம்புரா, மல்லேஸ்வரம், கே.ஆர்.மார்க்கெட், ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட், ஹரளூரு, மாரத்தஹள்ளி, பெல்லந்துார் என, பல்வேறு இடங்களில் சோதனை முறையில், ஐந்து நாட்களுக்கு, 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் தினம், 24 மணி நேரமும் செயல்பட்டு, பட்டாசு வெடிப்போரை கண்டு பிடித்தன.

பட்டாசு வெடிப்பு குறித்து, ஐந்து நாட்களில், 2,000 எச்சரிக்கை தகவல் அனுப்பியது. இதில், 850 தகவல்கள் 10:00 மணியை தாண்டியும் பட்டாசு வெடிக்கப்பட்டதாகும்.

ஏ.ஐ., அடிப்படையிலான கேமராக்கள், எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன.

வரும் நாட்களில் மேலும் பல இடங்களில், ஏ.ஐ., சாப்ட்வேர் பொருத்தப்பட்ட கேமராக்கள் பொருத்த ஆலோசிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us