இடைத்தேர்தல் நடந்த இரு தொகுதிகளிலும் ஓட்டு சதவீதம் குறைவு
இடைத்தேர்தல் நடந்த இரு தொகுதிகளிலும் ஓட்டு சதவீதம் குறைவு
ADDED : ஏப் 11, 2026 04:21 AM
தாவணகெரே: இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும், ஓட்டு சதவீதம் கடந்த முறையை விட, சற்று குறைந்து உள்ளது.
கர்நாடக சட்டசபையில் காலியாக இருக்கும், பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது. காலையில் இருந்தே மக்கள் மும்முரமாக ஓட்டு போட்டனர். மதியத்திற்கு மேல் ஓட்டுப்பதிவில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. மாலை, 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. பாகல்கோட்டில் 68.70; தாவணகெரே தெற்கில் 68.55 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
கடந்த, 2023 சட்டசபை தேர்தலை காட்டிலும், இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் ஓட்டு சதவீதம் சற்று குறைந்தே உள்ளது. 2023ல் பாகல்கோட்டில் 69.46 சதவீதம்; தாவணகெரே தெற்கில், 69.48 ச தவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஓட்டு சதவீதம் குறைந்திருப்பது ஆளுங்கட்சி மீதான அதிருப்தியாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்து உள்ளது.
தாவணகெரே தெற்கில் பா.ஜ., வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், அரசல், புரசலாக பேச்சு அடிபடுகிறது. கடந்த, 2024 ல் சென்னப்பட்டணா, சண்டூர், ஷிகாவி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. மூன்றிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2023 தேர்தலை விட, மூன்று தொகுதியிலும் ஓட்டு சதவீதம் அதிகரித்து இருந்தது. இப்போது குறைந்திருப்பது, மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக கூறப்படுகிறது.
