தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய தர்ஷன் ரேணுகாசாமி வழக்கின் 'அப்ரூவர்' பிரதோஷ் தகவல்
தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய தர்ஷன் ரேணுகாசாமி வழக்கின் 'அப்ரூவர்' பிரதோஷ் தகவல்
ADDED : ஆக 09, 2026 11:12 PM

பெங்களூரு: 'ரேணுகாசாமியை கொலை செய்த பின், இந்த வழக்கில் நான் தப்பிக்க உதவவில்லை என்றால், துப்பாக்கியால் சுட்டு கொள்வேன்' என்று நடிகர் தர்ஷன் கூறியதாக, அப்ரூவராக மாற உள்ள பிரதோஷ், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் பரப்பன அக்ரஹாா சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் ஐ.டி., ஊழியரும், தொழில் அதிபருமான பிரதோஷ், அப்ரூவராக மாற முடிவு செய்தார்.
இதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடக்கவுள்ளது.
இந்நிலையில் பிரதோஷ் தாக்கல் செய்த மனுவில் என்னென்ன விஷயங்கள் உள்ளது என்பது பற்றி, நேற்று தகவல் வெளியானது.
கொடூர தாக்கு பவித்ராவுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியதால், ரேணுகாசாமி மீது தர்ஷன் கோபம் அடைந்தார். சித்ரதுர்காவில் இருந்து பெங்களூரு பட்டனகெரேயில் உள்ள ஷெட்டிற்கு, ரேணுகாசாமி அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவரை தர்ஷனும், அவருடன் இருந்தவர்களும் மரக்கட்டையால் கொடூரமாக தாக்கினர். ரேணுகாசாமியை, பவித்ரா செருப்பால் அடித்தார். தர்ஷன் நெஞ்சில் மிதித்தார். இதை பார்த்து, நான் அதிர்ச்சி அடைந்தேன்.
ரேணுகாசாமியை விட்டு விடும்படி கெஞ்சினேன். ஆனால் என் பேச்சை தர்ஷன் உட்பட யாருமே கேட்கவில்லை. தர்ஷனை சமாதானம் செய்து, ஷெட்டின் இன்னொரு இடத்திற்கு அழைத்து சென்றேன்.
சிறிது நேரத்தில் ரேணுகாசாமி இறந்து விட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தர்ஷன், இந்த வழக்கில் கைதாகி உள்ள நாகராஜுக்கு 5 லட்சம் ரூபாயும்; வினய்க்கு 10 லட்சம் ரூபாயும் கொடுத்தார்.
வேறு சிறை நந்தீஷ், பவன், நாகராஜ் ஆகியோரை சரண் அடைய வைக்க பேச்சு நடந்தது. 'இந்த வழக்கில் எக்காரணம் கொண்டும் நான் சிக்க கூடாது' என்று, தர்ஷன் கூறினார்.
எனக்கு நீங்கள் ஒத்துழைக்கா விட்டால், துப்பாக்கியால் என்னை நானே சுட்டு கொள்வேன்' என்றும், தர்ஷன் கூறினார். அவரை காப்பாற்றுவதற்காக, ரேணுகாசாமி உடலை அப்புறப்படுத்த நான் உதவி செய்தேன்.
சிறையில் தர்ஷனும், ரேணுகாசாமி கொலையில் கைதானவர்களும் என்னை மிரட்டுகின்றனர். என்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும். அவர்களுடன் சேர்ந்து விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில், பிரதோஷ் குறிப்பிட்டுள்ளார்.
