என்னை விலைக்கு வாங்க முடியாது குமாரசாமி திடீர் ஆவேசம்
என்னை விலைக்கு வாங்க முடியாது குமாரசாமி திடீர் ஆவேசம்
ADDED : ஆக 09, 2026 11:11 PM

மைசூரு: ''நான் லாட்டரியை தடை செய்தபோது, தமிழகத்தில் இருந்து மூட்டை மூட்டையாக பணத்துடன் வந்தவர்களை திருப்பி அனுப்பினேன். அவர்களால் என்னை விலைக்கு வாங்க முடியாது. என்னை விலைக்கு வாங்க நினைப்பவர்கள், இன்னும் இந்த மாநிலத்தில் பிறக்கவில்லை,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
மைசூரில் நேற்று சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்த பின், குமாரசாமி அளித்த பேட்டி:
காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு, திட்டங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறது. மக்கள் நம்பும் வகையில் விளம்பரம் செய்யுங்கள். பிடதி நிலம் வளமான நிலம் என்று காங்கிரஸ் சட்டசபை குழு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.
பிடதி திட்டத்தை நிறுத்துவது பற்றி நானே சட்டசபையில் கூறியுள்ளேன். ஆவணங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளேன்.
பிடதி டவுன்ஷிப் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. இது பிடதி டவுன்ஷிப் என்ற திட்டத்தின் பெயரில் கொள்ளை அடிக்கும் திட்டமாகும். எனக்கு லஞ்சம் கொடுத்திருந்தால், அவர்கள் விசாரிக்கட்டும். என்னையும், தேவகவுடாவையும் விலைக்கு வாங்க முடியாது.
நான், லாட்டரியை தடை செய்தபோது, தமிழகத்தில் இருந்து மூட்டை மூட்டையாக பணத்துடன் வந்தவர்களை திருப்பி அனுப்பினேன். அவர்களால் என்னை விலைக்கு வாங்க முடியாது. என்னை விலைக்கு வாங்க நினைப்பவர்கள், இன்னும் இந்த மாநிலத்தில் பிறக்கவில்லை. அவர்களால் என் குரலை ஒடுக்க முடியாது.
எக்காரணத்தை கொண்டும் பிடதி டவுன்ஷிப் உருவாகாது. அவர்கள் லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கின்றனர். விவசாயிகளும், பெண்களும் பாதுகாப்பாக இருந்தால், பிடதி டவுன்ஷிப் உருவாகாது.
மோசமான மற்றும் ஊழல் நிறைந்த இந்த அரசுக்கு பதிலடி கொடுக்க, எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் தயாராக உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் பேசினால், காங்கிரசார் மதிப்பதில்லை. அதிகார மமதையால், எதிர்க்கட்சிகளை அவர்கள் அங்கீகரிப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
