ADDED : ஆக 09, 2026 11:11 PM
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், மலை மஹாதேஸ்வரா மலையில், வண விலங்குகள் சரணாலய பகுதியில், மூன்று நாட்களுக்கு முன், சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி திருடி சென்றது. இது குறித்து, வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள், சந்தன மரங்களின் பாதுகாப்புக்கும், மர்ம நபர்களை கண்டுபிடிக்கவும் ஊழியர்களை நியமித்துள்ளனர்.
வனத்துறை பாதுகாப்பு ஊழியரான மஹாதேவசாமி, 45 உட்பட சில ஊழியர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு, வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிரே வந்த காட்டு யானை, அவரை தாக்கியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
மற்ற ஊழியர்கள் வேறு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்தது. தகவலறிந்து வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். யானை நடமாட்டத்தால் மற்ற ஊழியர்கள், பணியில் ஈடுபட அஞ்சுகின்றனர்.
