பிரதமரா அல்லது பா.ஜ., தலைவரா? மோடிக்கு சித்தராமையா கேள்வி!
பிரதமரா அல்லது பா.ஜ., தலைவரா? மோடிக்கு சித்தராமையா கேள்வி!
ADDED : மே 12, 2026 06:54 AM

- - நமது நிருபர் -: கர்நாடக காங்கிரஸ் அரசை விமர்சித்து பேசியதை தொடர்ந்து, நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமரா அல்லது பா.ஜ., தலைவரா என, முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூருக்கு நேற்று முன்தினம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக அரசை விமர்சித்து பேசினார்.
இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட அறிக்கை:
எச்.ஏ.எல்.,லில் நடந்த பாராட்டு விழாவில், பிரதமர் மோடி காங்கிரஸ் அரசை விமர்சித்து உள்ளார். அவர் பேசிய வார்த்தைகள் மத்திய அரசின் தோல்வி, கர்நாடகாவில் பா.ஜ.,வின் மோசமான நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.
நேரு, இந்திரா, வாஜ்பாய் உள்ளிட்ட பிரதமர்கள், தெருக்களில் இறங்கி எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசியது இல்லை. ஆனால் மோடி செய்கிறார். அவர் பிரதமரா அல்லது பா.ஜ., தலைவரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பொய், தரம் தாழ்ந்த பேச்சு மூலம், பிரதமர் நாற்காலியின் கண்ணியம், மாண்பு, ஒழுக்கத்தை அழிக்கிறார்.
கர்நாடக பா.ஜ., நிலை மோசமாக உள்ளது. எடியூரப்பா, விஜயேந்திராவுக்கு எதிராக கட்சிக்குள் நிறைய அணிகள் உள்ளன. எடியூரப்பா மீது நுாற்றுக்கணக்கான குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது.
விஜயேந்திரா பேச்சை யாரும் கேட்பது இல்லை. அவரது வார்த்தைகளுக்கு ஒரு பைசா கூட மதிப்பே இல்லை. பிரதமர் மோடி முதலில் அவரது கட்சியை பார்க்கட்டும். பின், அடுத்த கட்சிகளை பற்றி பேசலாம்.
இந்தியாவின் வளர்ச்சி தேர் முன்னோக்கி பாய்வதாக பெருமை பேசிய அவர், இப்போது எதற்காக மக்களை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம்.
பெட்ரோல், சமையல் எண்ணெயை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். அவர் எத்தகையை வளர்ச்சியை செய்தார் என்று அவரே விளக்கட்டும்.
இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் போரில் இந்தியா நடுவில் சிக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தீர்க்கமான முடிவை எடுத்து இருந்தால், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது.
மஹாராஷ்டிராவுக்கு பின், அதிக ஜி.எஸ்.டி., வரி வசூல் செய்யும் மாநிலம் கர்நாடகா தான். எங்கள் மாநிலத்தின் நிதி நிலை நன்றாக உள்ளது. மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
