'தனியார் உதவி பெறும் பள்ளிகள் கல்லுாரிகள் மூடப்படும் அபாயம்'
'தனியார் உதவி பெறும் பள்ளிகள் கல்லுாரிகள் மூடப்படும் அபாயம்'
ADDED : செப் 17, 2026 11:15 PM

ஹூப்பள்ளி: ''அரசின் பல முடிவுகளால், வட கர்நாடகாவில் 60 சதவீதம் தனியார் உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்படும் சூழ்நிலையில் உள்ளது,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசின் பல முடிவுகளால் வட கர்நாடகாவில், 60 சதவீத தனியார் உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்படும் சூழ்நிலையில் உள்ளது. அங்கு, ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
அரசின் வாக்குறுதி திட்டத்தில் இருந்து கன்னட மொழி வழி அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால் பல தனியார் கல்வி நிறுவனங்கள், சிரமங்களை சந்தித்து வருகின்றன. கல்வித்துறை சீரழிந்து வருகிறது.
அரசு பள்ளிகளில் உள்ள விதிகள், உதவிபெறும் பள்ளிகளுக்கும் பொருந்த வேண்டும். வட கர்நாடக மக்கள் ஆரம்பத்தில் இருந்தே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டுனர்.
அரசு புதிய திட்டங்களை கொண்டு வந்து, நிலைமையை மேலும் சீர்குலைக்கக்கூடாது. சித்தராமையா முதல்வரானதில் இருந்து கல்வியில் அலட்சியம் காட்டப்படுகிறது. அவர், கல்வி முறையையே சீர்குலைத்துவிட்டார். இது தொடர்பாக அரசிடம் பலமுறை முறையிட்டும், எந்த பயனும் இல்லை.
இதை தெரிவித்து, வரும் நவ., 2ம் தேதி தார்வாடில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஊர்வலம் நடத்தி, மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவோம். நவ., 3ம் தேதி முதல், அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டு, காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.
வாக்குறுதிகளை தவிர, கல்வி பற்றி அரசு அக்கறை காட்டவில்லை. கே.பி.எஸ்., பள்ளிகளை திறப்பதை விட முட்டாள்தனமான செயல் வேறு எதுவுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
