ADDED : ஏப் 20, 2026 02:12 AM

பேகூர்: தனியார் நிறுவன ஊழியர் காரில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டாரா என, விசாரணை நடக்கிறது.
பெங்களூரு பசவபுராவில் வசித்தவர் நாராயணப்பா, 56; தனியார் நிறுவன ஊழியர். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றார்.
காலை 10:00 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். அவரை பற்றிய தகவல் இல்லை. மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் நாராயணப்பா காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் பேகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சிறிது நேரத்தில் போலீஸ் நிலையத்திற்கு வந்த அழைப்பில், ஓசூர் சாலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் காருக்குள் ஒருவர் இறந்து கிடப்பது பற்றி தகவல் வந்தது. அங்கு போலீசார் சென்று பார்த்தபோது, காருக்குள் இறந்து கிடந்தது நாராயணப்பா என்பது தெரிந்தது. அவரது உடல் மீட்கப்பட்டது.
அவரின் முகத்தில் காயம் இருந்தது. அவரை யாரோ அடித்து கொன்று, உடலை காருக்குள் வைத்து விட்டு தப்பி சென்றதாக குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர்.
இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
