ADDED : அக் 09, 2025 05:39 AM

சிக்கபல்லாபூர் : அம்மன் சிலை மீது கால் வைத்த பெண்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீனிவாச சாகர் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக தடுப்பணை பகுதியில் பலரும் குளித்து வருகின்றனர். அவ்வகையில், இந்த தடுப்பணையில் சிலர் குடும்பமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சில பெண்கள், அங்கிருந்த கங்கம்மா சிலை மீது கால் வைத்தவாறே குளித்தனர்.
இது வீடியோவாக இணையத்தில் வெளியாகி, சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதற்கு ஹிந்து அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
'அந்த பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் நடத்தப்படும்' என, அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
