/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடமாடும் காவிரி திட்டம் பொது மக்கள் வரவேற்பு
/
நடமாடும் காவிரி திட்டம் பொது மக்கள் வரவேற்பு
ADDED : மே 13, 2025 01:07 AM

பெங்களூரு :நடமாடும் காவிரி திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாக பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறி உள்ளார்.
பொது மக்களின் வீட்டு வாசலுக்கு, சுத்தமான குடிநீர் வினியோகிக்க 'நடமாடும் காவிரி' என்ற திட்டத்தை பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் கொண்டு வந்தது. இதற்காக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த செயலி மூலம் காவிரி தண்ணீரை ஆர்டர் செய்ய முடியும்.
இதன் பின், தண்ணீர் ஆர்டர் செய்தவரின் வீட்டு வாசலுக்கே டேங்கர் லாரி மூலம் வந்து வினியோகிக்கப்படும். இத்திட்டத்திற்கு பொது மக்களிடையே நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது:
இத்திட்டம் துவங்கப்பட்ட இரண்டு நாட்களிலே, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. சுத்தமான குடிநீருடன் டேங்கர் லாரிகள், வீட்டு வாசலுக்கே சென்று தண்ணீரை வினியோகிக்கின்றன.
லாரிகளில் உள்ள டேங்கர்களில் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் லாரி வந்து கொண்டிருப்பதை, ஆர்டர் செய்தவர் கண்காணிக்க முடியும். குடிநீர் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட டேங்கர் லாரிகள், சுத்தமான குடிநீரை வினியோகிக்கும் என்பதை மக்கள் உறுதியாக நம்பலாம். பி.ஐ.எஸ்., தரம் கொண்ட காவிரி தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீரின் தரம் குறித்து, ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை சோதிக்க, குடிநீர் வாரியம் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.