தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பொங்கல் கோலப்போட்டியில் பட்டையை கிளப்பிய புனித வளனார் பல்கலை கழக மாணவ - மாணவியர்

 பொங்கல் கோலப்போட்டியில் பட்டையை கிளப்பிய புனித வளனார் பல்கலை கழக மாணவ - மாணவியர்

 பொங்கல் கோலப்போட்டியில் பட்டையை கிளப்பிய புனித வளனார் பல்கலை கழக மாணவ - மாணவியர்


ADDED : ஜன 10, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புனித வளனார் பல்கலை கழகத்தில் நடந்த கோலப்போட்டியில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று விதவிதமான கோலங்கள் வரைந்து அசத்தினர்.

பெங்களூரு சாந்திநகர் லால்பாக் டபுள் ரோட்டில், புனித வளனார் பல்கலை கழகம் உள்ளது. இந்த பல்கலை கழகத்தின் தமிழ் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

காலை, 10:00 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமார், திரைப்பட இயக்குநர் ரிச்சர்ட் விஜயகுமார் பங்கேற்கின்றனர். தமிழர் பெருமையை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்ற மாணவ, மாணவியர் ஆர்வமாக உள்ளனர்.

இன்று முடிவுகள் இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, பல்கலை கழக வளாகத்தில் நேற்று கோலப்போட்டி நடந்தது. தமிழ் மாணவ, மாணவியர் ஆர்வமாக பங்கேற்றனர். தனியாகவும், குழுவாகவும் இணைந்து கோலமிட்டனர். தமிழ் பாடல்களை ஒலிக்க விட்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் கோலப்போட்டி நடத்தப்பட்டது. பல்கலை கழகத்தின் ஆங்கில துறையை சேர்ந்த பேராசிரியை ஜெசிந்தா போட்டியின் நடுவராக இருந்தார். எந்த கோலம் சிறந்தது என்று தேர்வு செய்து உள்ளனர். இன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ் சங்க தலைவரான மாணவி யோகா அட்சயா கூறுகையில், ''தமிழ் சங்க தலைவராக முதல் முறையாக பொறுப்பேற்று உள்ளேன். எனது தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் சங்கத்தில், 21 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் ஒத்துழைப்புடன் ஏற்பாடுகளை செய்து உள்ளோம். இன்று (நேற்று) கோலப்போட்டி சூப்பராக நடந்தது. 10 அணியினர் பங்கேற்றனர். சிலர் தனியாகவும் கோலமிட்டனர். மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்,'' என்றார்.

கை கொடுப்பு வணிக பிரிவு மாணவி மோனிஷா கூறுகையில், ''முதல்முறையாக போட்டியில் கலந்து கொண்டு தனியாக கோலம் போட்டேன். வீட்டில் நிறைய முறை கோலம் போட்டு உள்ளேன். அது இப்போது கை கொடுத்தது,'' என்றார்.

குழுவாக இணைந்து கோலம் போட்ட நவீனா, ரோஷன், குளோரி, சரண், மரியா கூறுகையில், ''நண்பர்கள் ஒன்றாக இணைந்து கோலம் போட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்களே கடைக்கு சென்று வண்ண பொடிகளை வாங்கி வந்தோம். இது, புதிய அனுபவமாக இருந்தது,'' என்றனர்.

இப்போட்டியில் மாணவியர் கோலம் போடும் போது, மாணவர்களும் அவர்களுக்கு உதவி செய்தனர். சிலர் கோலங்களுக்கு மெருகூட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us