சித்தராமையாவுக்கு ராகுல் நெருக்கடி எதிர்க்கட்சி தலைவர் அசோக் காட்டம்
சித்தராமையாவுக்கு ராகுல் நெருக்கடி எதிர்க்கட்சி தலைவர் அசோக் காட்டம்
ADDED : ஜூன் 02, 2026 01:23 AM

பெங்களூரு: ''முதல்வர் பதவியை விட்டு தர சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் மேலிடம் நெருக்கடி கொடுத்து உள்ளது,'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசு என்கிற பழுதடைந்த பஸ்சை ஓட்டி வந்த சித்தராமையா, அந்த பஸ்சை சிவகுமாரிடம் கொடுத்து உள்ளார். பழுதடைந்த பஸ்சின் இன்ஜினும் கெட்டு விட்டது. அந்த பஸ்சை சிவகுமார் எப்படி இயக்க போகிறார் என்பதை தான் பார்க்க வேண்டும்.
சித்தராமையா தன்னை தானே அஹிந்தா சமூக தலைவர் என்று கூறி வந்தார். முதல்வர் பதவியில் இருந்து தன்னை நீக்க மாட்டார்கள் என்று அதீத நம்பிக்கையில் இருந்தார். ஆனால் நடந்தது வேறு மாதிரியாக உள்ளது.
ராஜிவ், வீரேந்திர பாட்டீலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினார். தேவராஜ் அர்ஸ், பங்காரப்பாவை இந்திரா வெளியேற்றினார். இப்போது சித்தராமையாவை, ராகுல் நீக்கி விட்டார். பின்தங்கிய வகுப்பினருக்கு காங்கிரஸ் மேலிடம் அநீதி இழைக்கிறது.
முதல்வர் பதவியில் இருந்து விலக, சித்தராமையா மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டார். ஆனால் மூன்று நாட்களில் விலக, அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாங்கள் ஆதரவாக உள்ளதாக காங்கிரஸ் இனி சொல்ல கூடாது. எதிர்காலத்தில் அஹிந்தா சமூகம், காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்டும்.
முதல்வர் மாறினால் மாநிலத்தின் நிதி நிலை மாறி விடுமா. நமது மாநில கடன் 7.54 லட்சம் கோடி ரூபாய். வருமானத்தை விட கடன் அதிகம். சித்தராமையா கடனை அதிகரித்து உள்ளார். இந்த கடனை யார் திரும்ப செலுத்துவார். சிவகுமார் செலுத்த போகிறாரா?
அறிவியலுக்கு மாறான வாக்குறுதி திட்டங்களை கொண்டு வந்தால், இதுதான் கதி. வளமான கர்நாடகாவை காங்கிரசுக்கு கொடுத்தோம். ஆனால், பொருளாதாரத்தை நாசமாக்கி உள்ளனர். அலிபாபாவும், 40 திருடர்களை போன்று இந்த அரசு ஆகி விட்டது.
பெங்களூரில் சாலைகள் மோசமாக உள்ளன; குப்பை நாற்றம் வீசுகிறது. இந்த அரசு ஐ.சி.யு.,வில் உள்ளது. அதற்கு ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜன் வாங்கவே கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
