UPDATED : மார் 22, 2026 06:03 AM
ADDED : மார் 22, 2026 06:01 AM

: தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு கோட்ட அலுவலக வளாகத்தில், குழந்தை பராமரிப்பு மையம் சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இது, ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்காகவே பிரத்யேகமாக திறக்கப்பட்டது.
சின்னஞ்சிறு குழந்தையை வைத்திருக்கும் பெண் ஊழியர்கள் ஒரு வித பயத்துடனே பணி செய்வர். இது, பணி நேரத்தில் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எ னவே, அவர்களின் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் பொருட்டு, புதிதாக பராமரிப்பு மையம் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த குழந்தை பராமரிப்பு மையத்தில், பாலுாட்டும் அறை, கழிப்பறை, ஓய்வு எடுக்கும் அறை, விளையாட்டு பொருட்கள் போன்றவை உள்ளன.
குழந்தைகளை கண்காணிக்க ஆசிரியரும் உள்ளார். மேலும், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. எனவே, ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை தாராளமாக விட்டு செல்லலாம்.
இந்த மையம் மகப்பேறு விடுப்புக்கு பிறகு, பணிக்கு திரும்பும் பெண் ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும்.
இங்கு குழந்தைகளுக்கு கற்பிக்கவும் படுகிறது என்பது மற்றொரு சிறப்பு.
இந்த மையத்தில் ரயில்வே ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு பதிவு கட்டணம் 500 ரூபாயும்; மாதக்கட்டணம் 1,500 ரூபாயும் செலுத்த வேண்டும்.
காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை மையம் செயல்படும். சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் பராமரிப்பு மையம் இயங்காது.
ஒரு வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. அதேபோல, ரயில்வே ஊழியர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி; மற்ற எந்த அரசு துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கும் அனுமதி கிடையாது.
குழந்தைகள் பராமரிப்பு மைய ஆசிரியர் அக் ஷதா கூறியதாவது:
காலை முதல் மாலை வரை பராமரிப்பு மையம் திறந்திருக்கும். வயதிற்கு ஏற்றார் போல குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை. தற்போது, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மையத்தில் உள்ளனர். இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. அனைத்து விதமான விளையாட்டு பொருட்களும் உள்ளன. எனவே, குழந்தைகளுக்கு நேரம் போவதே தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
