சித்தராமையாவை பதவியிலிருந்து இறக்கியதால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது ராஜண்ணா
சித்தராமையாவை பதவியிலிருந்து இறக்கியதால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது ராஜண்ணா
ADDED : ஆக 04, 2026 07:57 PM

பெங்களூரு: ''சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்,'' என, மதுகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜண்ணா கூறியுள்ளார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
கடந்த காலங்களில் முதல்வர்கள் மாற்றம் நடந்த போது, கட்சிகளுக்கு எவ்வளவு பாதிப்பு, தாக்கம் ஏற்பட்டது என்பதை பார்த்து உள்ளோம். அதுபோல சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதால், கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சித்தராமையா கூறி இருப்பதும், ஒரு வகையில் கட்சிக்கு இழப்பு தான்.
முதல்வர் சிவகுமார் சிறந்த ஒருங்கிணைப்பாளர். எந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக செய்கிறார். அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்வதாக கூறினால், அவர்கள் ராஜினாமா கடிதத்தை பெற கட்சி மேலிடம் உத்தரவிட்டிருந்தால், அதன்படியே முதல்வர் செயல்பட வேண்டும்.
மேலிட முடிவை நாம் கேள்வி கேட்க முடியுமா?
அமைச்சரவையில் கோலார் மாவட்டத்திற்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். மாவட்ட வாரியாக பிரதிநிதித்துவம் கிடைக்காத போது, அது மாவட்டத்தின் வளர்ச்சி, நிர்வாகத்தை பாதிக்கும். ஒரு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சருக்கு, இன்னொரு மாவட்ட பொறுப்பை வழங்குவதை விட, முடிந்தவரை மாவட்ட வாரியாக பிரதிநிதித்துவம் வழங்குவது நல்லது.
புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். வறட்சி நிலைமையை சமாளிக்க அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியை சித்தராமையா புறக்கணித்தது பற்றி எனக்கு தெரியாது.
நான் ஆரம்பத்தில் இருந்தே அமைச்சர் பதவி கேட்கவில்லை. பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.,க்கள் கட்சியின் நலனுக்காக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
