மாநில வளர்ச்சி பணிகள் பாதிப்பு ராஜண்ணா பரபரப்பு குற்றச்சாட்டு
மாநில வளர்ச்சி பணிகள் பாதிப்பு ராஜண்ணா பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : மே 07, 2026 11:30 PM

மைசூரு: ''கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பாக, ஏற்பட்டுள்ள குழப்பத்தால் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன,'' என முன்னாள் அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார்.
மைசூரில் அவர் அளித்த பேட்டி:
முதல்வர் மாற்றம் சர்ச்சையால், மாநிலத்தில் ஏற்படும் குழப்பத்தை சரி செய்ய வேண்டும் என, ஏற்கனவே மேலிடத்துக்கு கடிதம் எழுதினேன். நேரிலும் சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன்.
கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதன்படி நடப்பதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். எனவே முதல்வர் மாற்றம் விஷயத்தில், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு, கட்சி மேலிடம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு மற்றும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்.
அமைச்சரவையை மாற்றி அமைக்க, அனுமதி அளிக்க வேண்டும். முதல்வர் மாற்றம் நடக்குமா அல்லது நடக்காதா என்பது பற்றி, தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும். முதல்வர் மாறுவாரோ அல்லது சித்தராமையாவே பதவியில் நீடிப்பாரா என்று மேலிடம் கூறவில்லை. இதுபோன்ற குழப்பத்தால், மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
காங்கிரசில் முதல்வராகும் தகுதி பெற்ற, ஒரு டஜன் தலைவர்கள் உள்ளனர். சிவகுமார், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறு இல்லை. அவர் எங்கள் கட்சியின் தலைவர். மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர், எம்.பி.பாட்டீல் உட்பட பலர் முதல்வராகும் திறன் கொண்டவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
