/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓராண்டு சிறை வாசம் ரன்யாவுக்கு உறுதி
/
ஓராண்டு சிறை வாசம் ரன்யாவுக்கு உறுதி
ADDED : ஜூலை 18, 2025 11:22 PM

பெங்களூரு: தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் மீது 'காபிபோசா' எனும் அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளதால், அவருக்கு ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தங்கம் கடத்திய வழக்கில், நடிகை ரன்யா ராவ், அவரது முன்னாள் காதலன் தருண் கொண்டாரு ராஜு, சாஹில் ஜெயின் ஆகியோரை டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேரும் சேர்ந்து 100 கிலோ வரை தங்கம் கடத்தியது பற்றி, நீதிமன்றத்தில், டி.ஆர்.ஐ., தகவல் தெரிவித்தது.
மூன்று பேரும் ஜாமின் கேட்டு பொருளாதார குற்றப்பிரிவு, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமின் கிடைத்தால் மூன்று பேரும் வெளிநாடு தப்புவதுடன், சாட்சிகளை அழிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய டி.ஆர்.ஐ., அதிகாரிகள், மூன்று பேர் மீதும் 'காபிபோசா' எனும் அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய, மத்திய அரசின் நிதித் துறைக்கு உட்பட்ட மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்புக்கு பரிந்துரை செய்தனர்.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு, மூன்று பேரையும் காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்ய கடந்த 16ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான உத்தரவு நகல், டி.ஆர்.ஐ.,க்கு கிடைத்தது. அந்த நகல் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், மூன்று பேருக்கும் ஓராண்டு ஜாமின் கிடைக்காது என்று கூறப்படுகிறது.