ரேஷன் அட்டை, பென்ஷன் பிரச்னை: தீர்வு காண ரூபகலா எம்.எல்.ஏ., உறுதி
ரேஷன் அட்டை, பென்ஷன் பிரச்னை: தீர்வு காண ரூபகலா எம்.எல்.ஏ., உறுதி
ADDED : ஆக 09, 2026 12:03 AM

தங்கவயல்: ''பி.பி.எல்., எனும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டை, முதியோர் பென்ஷன் பிரச்னைகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்,'' என்று தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.
தங்கவயல் நகராட்சி அரங்கில் நேற்று ரூபகலா தலைமையில் வருவாய்த்துறை, உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ரூபகலா பேசியதாவது:
தங்கவயலில் 1,800 பி.பி.எல்., ரேஷன் அட்டைகள், ஏ.பி.எல்., எனும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. எந்த அடிப்படையில் ரேஷன் அட்டைகள் மாற்றப்பட்டுள்ளன என்ற தகவல்களை அதிகாரிகள் வழங்காதது ஏன்?
தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, மீண்டும் பி.பி.எல்., ரேஷன் அட்டை பெறுவதற்கு அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல், முதியோர் பென்ஷன் நிறுத்தியுள்ளதற்கான காரணங்களையும் தெரிவிக்க வேண்டும்.
பி.பி.எல்., ரேஷன் அட்டை மற்றும் பென்ஷன் பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அது தொடர்பாக அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை, சம்பந்தப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் முறையாக சரிபார்க்க வேண்டும்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு, 32,000 ரூபாய் ஆண்டு வருமானம் எனக் குறிப்பிடப்பட்ட வருமானச் சான்றிதழை வழங்க வேண்டும். ரேஷன் அட்டை, பென்ஷன் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கா ண அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
