'நைஸ்' சாலையில் சுங்கவரி வசூல்: உடனே நிறுத்த குமாரசாமி கோரிக்கை
'நைஸ்' சாலையில் சுங்கவரி வசூல்: உடனே நிறுத்த குமாரசாமி கோரிக்கை
ADDED : ஆக 09, 2026 12:03 AM

பெங்களூரு: ''பெங்களூரின் நைஸ் சாலையில், சுங்க வரி வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்,'' என மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நைஸ் நிறுவனம், அரசிடம் முன் கூட்டியே அனுமதி பெறாமல், நைஸ் சாலையின் சுங்க வரியை அதிகரித்துள்ளது. எனவே நைஸ் சாலையில் சுங்க வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரின் பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள் போராட்டம் நடத்த வேண்டும்.
விதிமீறலான சுங்க வரி வசூலிப்பது, நாட்டின் மிகப்பெரிய ஊழலாகும். இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடக்க வேண்டும் என, சட்டசபை கமிட்டியும் அறிக்கை அளித்துள்ளது. அப்படி இருந்தும் அரசு மவுனமாக இருப்பது ஏன்.
கடந்த 2002லிருந்து விவசாயிகளுக்காக தேவகவுடா போராட்டம் நடத்துகிறார். நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றும் பெயரில், ஏழை வியாபாரிகளை வெளியேற்றும் பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, நைஸ் திட்டத்தின் முறைகேட்டை எப்போது சுத்தம் செய்வார். சட்டவிரோதமாக சுங்க வரி வசூலிப்பதை, எப்போது நிறுத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
