ADDED : மே 07, 2026 11:12 PM

ஐ.பி.எல்., இறுதி போட்டி பெங்களூரில் இருந்து ஆமதாபாத்துக்கு மாற்றப்பட்டு இருப்பதால், ஆர்.சி.பி., ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், நாட்டின் பல நகரங்களில் நடந்து வருகின்றன. இம்மாதம் 31ம் தேதி இறுதி போட்டி நடக்கிறது. முதலில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், இறுதி போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று முன்தினம் பி.சி.சி.ஐ., தனது முடிவை மாற்றியது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் என்று அறிவித்தது. இதனால் ஆர்.சி.பி., அணி ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இம்முறை சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி., அணி 7 போட்டிக்கு பதிலாக, ஐந்து போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளது.
இறுதி போட்டி எந்த அணிகளுக்கு இடையில் நடந்தாலும், போட்டியை காண ஆர்வமாக இருந்தோம். ஆமதாபாத்துக்கு இறுதி போட்டியை மாற்றியது சரியல்ல என்று சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து உள்ளனர். பி.சி.சி.ஐ., முடிவை கேலி செய்யும் விதமாக, ட்ரோல்கள், மீம்ஸ்களும் பதிவிடப்படுகின்றன.
- நமது நிருபர் -
இது ஒரு புறம் இருக்க, சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டி பார்க்க, மக்கள் பிரதிநிதிகள் டிக்கெட் கேட்டதால் தான், ஆமதாபாத்துக்கு இறுதி போட்டி மாற்றப்பட்டது என்றும் தகவல் உள்ளது.
இதனால் மக்கள் பிரதிநிதிகள் மீதும், ஆர்.சி.பி., ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''நம் நாட்டின் அனைத்து மூலதனங்களும் குஜராத் மாநிலத்திற்கு செல்கிறது. இப்போது ஐ.பி.எல்.,லையும் கூட அபகரித்து விட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா ஐ.சி.சி., தலைவராக இருப்பதால் நினைத்ததை சாதித்து கொள்கிறார். எதற்காக இறுதி போட்டி ஆமதாபாத்துக்கு மாற்றப்பட்டது என்பதற்கு தெளிவான விளக்கம் வேண்டும்,'' என்றார்.
